தண்ணீர் பஞ்சத்தால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம்.! பள்ளிகளுக்கு லீவு விட கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் காரணமாக, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பின்தற்போது பள்ளிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து 100 டிகிரி பாரன் ஹீட்டிற்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் கடும் பாதிப்பிற்காளாகியுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருவதால், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை மூட வேண்டிய சூழல் உள்ளது.

கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அரசு பள்ளிகளில் கை கழுவ கூட தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் திண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. கிராம பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அந்த பள்ளிகளில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரை நம்பி உள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் கிராமப்புறத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் குடிக்க கூட குடிநீர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இதன் காரணமாக மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்காவது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டியது அவசியமாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசினுடைய பொறுப்பு. பள்ளிகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை அரசால் சரி செய்ய முடியவில்லை என்றால், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தாவது மாணவர்களின் உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பாடத்திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட, தற்போது மிக அதிக வெப்பநிலை தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இனி வரும் சில நாட்களுக்கு இதே வெப்பநிலை தொடரும் என அறிவிக்கப்பட்ட பிறகும், பள்ளிகளை நாங்கள் நடத்தியே தீருவோம் என முரண்டுபிடிப்பது தேவையற்றது என கூறியுள்ளனர்.
தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என்ற பாகுபாடின்றி தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேவைப்படும் நேரத்தில் காசு செவலழித்தால் கூட தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த அளவு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் போது, பள்ளிகளுக்கு வருவதால் பாதிக்கப்படுவது மாணவர்களே.
கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் மாணவர்கள் சிறுநீர் வருவதை அடக்கி கொள்கின்றனர். இதனால் பல்வேறு விதமான நோய்களுக்கும், சிறுநீர் தொற்றுக்கும் அவர்கள் ஆளாகின்றனர். தனியார் பள்ளிகளில் கூடவே மின்வெட்டும் சேர்ந்து கொண்டு மாணவர்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர் என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன என்றும் அவற்றை கண்டறிந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications