அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு.. லாப நோக்கோடு செயல்படும் குடிநீர் வாரியம்.. மக்கள் வேதனை
Recommended Video
சென்னை: தலைநகரான சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், குடிநீர் வாரியம் லாப நோக்கத்தோடு வருவாயை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழாவரம் உள்ளிட்ட ஏரிகள் வறட்சியின் பிடியில் சிக்கி பரிதாபமாக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக சென்னை குடிநீர்வாரியம் மூலம் தினம் 450 லாரிகளை கொண்டு சுமார் 6500 நடைகள் பல இடங்களில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இருப்பினும் தலைநகர வாசிகளின் தண்ணீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய இயலாத சூழல் தான் உள்ளது. 2004-ல் சென்னையில் கடும் குடிநீர் பஞ்சத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே, தற்போதும் ஈரோடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து ரயில்கள் மூலம் தண்ணீர் எடுத்து வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அதே போல தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முன்னெடுக்கப்பட்ட வீராணம் திட்டம், தெலுங்கு கங்கை திட்டம், கிருஷ்ணா நதி நீர் திட்டம் போன்றவற்றில் உரிய பேச்சுவார்த்தை நடத்தி, சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு போதுமான நீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் குடிநீர் வாரியம், நடப்பாண்டில் ரூ.349 கோடி குடிநீர் வரியை வசூலிக்கவும், வருவாயை ரூ1,017 கோடியாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டிய குடிநீர் வாரியம், லாப நோக்கத்துடன் செயல்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications