ஒரே வாரத்தில் வரப்போகும் மெகா அறிவிப்பு.. சஸ்பென்ஸ் வைக்கும் டிஆர்பி ராஜா! என்னவாக இருக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வது போன்ற குவாலிட்டியில் நாட்டில் வேறு எங்கும் செமிகண்டெக்டரை உற்பத்தி செய்ய முடியாது என்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த வாரம் தொழிற்துறை தொடர்பாக மிக முக்கியமான ஒரு அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மின்னணு உதிரிப் பாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டத்தைத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சிகள் குறித்தும் அடுத்து வெளியாகும் முக்கியமான அறிவிப்புகள் குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

டி ஆர் பி ராஜா
செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, "தமிழ்நாடு தொழில்துறையில் மிகப் பெரியளவில் வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக மின்னணு துறையில் மிக பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. 14.6 பில்லியன் டாலர் மதிப்பில் மின்னணு உதிரிப் பாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டில் நடந்துள்ளது. முதல்வர் உத்தரவின்படி 100 பில்லியன் டாலர் இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செல்போன் கேமரா, டிஸ்ப்ளே, ஃபிட்னஸ் பேண்ட் உற்பத்தி அதிகரித்து வருகிறது.
60 ஆயிரம் பேருக்கு வேலை
இதன் மூலம் தமிழகத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி முதலீடுகள் கூடுதலாக வரும். மேலும், 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். நமது நாட்டில் ஒட்டுமொத்தமாகத் தயாரிக்கப்படும் ஒட்டுமொத்த மின்னணு பொருட்களில் சுமார் 41.23 சதவீதம் தமிழ்நாட்டில் தான் தயாரிக்கப்படுகிறது. நாட்டிலேயே மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் தரம்
தமிழ்நாட்டில் செய்யக்கூடிய ஒரு பொருள் இந்தியாவில் வேறு எங்கும் செய்ய முடியாது. இந்தத் தரத்தில் வேகத்தில் இந்தியாவில் வேறு எங்கும் தமிழகத்தில் செய்வது போன்ற பொருட்களைச் செய்யவே முடியாது. அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு, அரசின் உதவி, திறமை ஆகியவை தமிழகத்தில் மட்டுமே உள்ளது.
இதில் எல்லாவற்றையும் விடத் திறமை தான் முக்கியம். மற்ற விஷயங்களைக் கூட கற்றுக் கொடுத்துவிடலாம். ஆனால், பிழைகள் இல்லாமல் செய்யத் திறமை வேண்டும். பல கோடி பொருட்களில் ஒரு குறைபாடு கூட இல்லை என்ற நிலை வர வேண்டும் தானே.. இந்தளவுக்குத் திறமை வேறு எத்தனை மாநிலங்களில் உள்ளன? இது தமிழகத்தில் மட்டுமே உள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் நிச்சயம் தமிழகத்திற்கு வருவார்கள். திறமையை வைத்து வர வைப்போம்.
ஒரு வாரத்தில் சிறப்பான அறிவிப்பு
இன்னும் ஒரு வாரத்தில் மற்றொரு சிறப்பான அறிவிப்பு இருக்கிறது. அதற்குத் தேவையான பணிகளைச் செய்து வருகிறோம். முதலமைச்சர் உத்தரவு கிடைத்ததும் நிச்சயம் மிகச் சிறப்பான அறிவிப்பை வெளியிடுவோம்.
நாம் கஷ்டப்பட்டு வளர்ச்சிப் பணிகளைச் செய்யும் நிலையில், சிலர் வந்து அதைப் பறித்துக் கொண்டு போவதாகக் குற்றச்சாட்டுகளைப் பார்க்க முடிகிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு செல்லுங்கள்.. அதையும் தாண்டி நாங்கள் வளர்ந்து கொண்டு தான் இருப்போம். முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல நிதியைக் கொடுக்கவில்லை என்றாலும் பிரச்சினை கொடுத்தாலும்.. தமிழ்நாடு போராடும் வெல்லும். இந்த செமி கண்டெக்டர் துறையிலும் அப்படியே நடக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications