"எங்களுக்கு பணமே வரலையே.." சிரித்து கொண்டே சொன்ன எடப்பாடி பழனிசாமி.. என்ன மேட்டர் தெரியுமா?
சென்னை: தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் முறை கடந்த 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பெறும் நன்கொடை குறித்த தகவல்களைப் பொதுவெளியில் அறிவிக்கத் தேவையில்லை என்ற விதி சர்ச்சையைக் கிளப்பியது.

தேர்தல் பத்திரங்கள்: இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இத்திட்டம் செல்லாது என அறிவித்தது. மேலும், இதில் பெறப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்களைப் பகிர வேண்டும் எனக் கூறப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2021 முதல் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக, 2019 முதல் 2023 வரையிலான 4 ஆண்டுகளில் ரூ.628.50 கோடி இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையைப் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2021-2022 நிதியாண்டில் திமுகவுக்கு 318 கோடி நன்கொடை தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளது. அதேநேரம் அதிமுகவுக்குக் கடந்த 2020 முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை எதுவும் கிடைக்கவில்லை.
'அமைச்சர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்கிடுங்க'..எடப்பாடிக்கு இன்ப அதிர்ச்சி தந்த துரைமுருகன்
எடப்பாடி பழனிசாமி: இதற்கிடையே தேர்தல் பத்திரங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "எங்களுக்கு அந்த மாதிரி பணமே வரலையே.. வந்தால் தானே இது குறித்துத் தெரியும். எங்களுக்கு இதற்கெல்லாம் வாய்ப்பு இல்லையப்பா.. வாய்ப்பு இருந்தால் எங்களுக்குத் தெரியும்" என்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும், திமுக பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமின்றி தேர்தல் பத்திரங்கள் மூலமாகவும் நிதியைத் திரட்டும் திமுக தங்களைப் போன்ற அரசியல் கட்சிகளை நசுக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "இதுவரை 52 குழுக்களைப் போட்டு இருக்கிறார்கள்.. இந்த ஆட்சி அமைத்த பிறகு எத்தனை குழுக்கள் இவர்கள் அமைத்தார்கள். அதில் எத்தனை குழுக்கள் அரசுக்கு முழுமையாக அறிக்கையைச் சமர்ப்பித்தார்கள். அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
திமுக மீது தாக்கு: உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினீர்கள். எந்த தொழிற்சாலைகள் தமிழ்நாட்டிற்கு வருகிறது. எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளீர்கள்.. இதன் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறித்தும் கேட்டேன். அது குறித்தும் எந்த தகவலும் இல்லை. உங்கள் தொகுதியில் முதல்வன் தொகுதியில் தீர்வு காணப்பட்ட மனுக்கள் குறித்து தகவல் கேட்டேன்.. எத்தனைக்கு முழு தீர்வு கண்டுள்ளார்கள். எத்தனை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களும் இல்லை.
திமுக தேர்தல் அறிக்கையில் 500க்கும் அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் 10% அறிவிப்புகளை மட்டுமே இப்போது நிறைவேற்றியுள்ளனர். மீதமுள்ள 90% அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், முதல்வர் உட்பட அனைத்து திமுகவினரும் எதோ 95% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பச்சையாகப் பொய் சொல்லி வருகிறார்கள்.
வாக்குறுதிகள் என்னாச்சு: ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றார்கள். அதிலும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருக்கிறது என்றெல்லாம் சொன்னார். இதுவரை அந்த ரகசியம் என்னாச்சு எனத் தெரியவில்லை. இனிமேலாவது அவர் அந்த ரகசியத்தைக் கண்டுபிடிப்பார் என நம்புகிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்து 33 மாதத்தில் மட்டும் ரூ.2.47 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். திமுக அரசு எந்தவொரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இதனால் மக்கள் யாரும் பலனடையவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications