கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின்
சென்னை: கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தமிழக தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததை போல் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது!

அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் #கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு (டி.என்.எஸ்.டி.ஏ.) மாநிலம் முழுவதும் எட்டு முக்கிய தொல்லியல் தளங்களில் அகழாய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வகம் (ஏ.எஸ்.ஐ.) அனுமதி வழங்கியுள்ளது.
நிபுணர் குழு பரிந்துரையின் பேரில், 1959 பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் விதிகள் கீழ், மார்ச் 13 அன்று இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் சிவகங்கை கீழடி (11ஆம் கட்ட) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் அடங்கும்.
அனுமதி வழங்கப்பட்ட மற்ற இடங்கள்
தூத்துக்குடி பட்டிணமருதூர், தென்காசி கரிவலம்வந்தநல்லூர், கடலூர் மணிகொல்லை, விழுப்புரம் ஆதிச்சனூர், கோவை வெள்ளலூர், சேலம் தெலுங்கனூர்-மங்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகும்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 பட்ஜெட்டில் அறிவித்த இத்திட்டங்களுக்கு டி.என்.எஸ்.டி.ஏ. 2025 ஜூலையில் அனுமதி கோரியது. அகழாய்வுப் பருவம் ஜனவரி-ஜூலை என்பதால், தாமதமின்றி ஒப்புதல் வழங்க தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தினர். பருவமழையால் களப்பணி பாதிக்கும் எனக் குறிப்பிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினும் விரைந்து அனுமதியை வலியுறுத்தினார்.
இதற்கிடையே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பண்டைய காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) கடலோரத்தில் நீருக்கடியில் ஆய்வு நடத்த டி.என்.எஸ்.டி.ஏ. கடந்த ஆண்டு அனுமதி கோரியது. 2025 செப்டம்பரில் ஏ.எஸ்.ஐ. இதற்கான ஒப்புதலை வழங்கியதையடுத்து, பூம்புகார் கடற்கரைக்கு அப்பால் ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த செய்தியை குறிப்பிட்டு ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications