ரூ.5 ஆயிரம் கோடி கல்வி நிதி பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறீர்கள்? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில்!
சென்னை: தமிழ்நாட்டின் கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தாலும், தமிழக அரசு நிதி பிரச்சனையை சமாளிக்கும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்பு விவகாரம் 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் பிரச்சனை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், தமிழகர்களை மோசமாக விமர்சித்த பாஜகவுக்கு மக்கள் சரியான நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் பாஜக இடையில் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதி மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதொடர்பாக விவாதத்தின் போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக எம்பிக்களை பார்த்து நாகரீகமற்றவர்கள் என்று விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக எம்பிக்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தர்மேந்திர பிரதான் தனது வார்த்தைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். இதனால் இந்தி திணிப்பு விவகாரம் பரபரப்பாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கும் வகையில் 50 மின் ஆட்டோக்கள் வழங்கப்பட்டது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டையும், பெரியாரையும் இழிவுபடுத்துவதை பாஜக ஒரு கொள்கை முடிவாக எடுத்து செய்கிறது. தமிழர்கள் பார்க்க நாகரீகமில்லாதது போல் தெரிகிறோமா? அப்படி சொல்பவர்கள்தான் நாகரீகமின்றி தமிழர்களை விமர்சிக்கிறார்கள். இதற்கு தமிழ்நாட்டு மக்கள் வாய்ப்பு கிடைக்கும் போது பதிலடி கொடுப்பார்கள்.
அமலாக்கத்துறை ஆய்வை அனுப்பியதே பாஜகதான். இந்தி திணிப்பு விவகாரம் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வரும் பிரச்சனை. அதற்கு முன்பாகவே தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக கடிதம் எழுதி இருக்கிறோம். பணம் கொடுங்கள் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். அதனால் இந்த விவகாரத்தை பாஜகதான் திசை திருப்புகிறது.
மேலும் மத்திய அரசு நிதி அளிக்கவில்லை என்றாலும், தமிழக அரசு நிச்சயம் சமாளிக்கும் என்று தெரிவித்தார். அதேபோல் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கேள்விக்கு, மார்ச் 22ஆம் தேதி தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதில் மற்ற மாநில முதலமைச்சர்கள், மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு பங்கேற்கிறார்கள் என்பது விரைவில் தெரியும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications