தமிழ்நாட்டிற்கு இந்தி தேவையில்லை.. இந்தி திணிப்பை அதிமுக ஆதரிக்காது.. ஜெயக்குமார்!
சென்னை: அதிமுக எந்தநிலையிலும் இந்தி திணிப்பை ஆதரிக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதற்கு தமிழகத்தின் திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில், இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள்.

இந்தி திணிப்பு ஏன்?
இன்னும் சில மொழிகளையும் இந்த அட்டவணையில் இணைக்க வேண்டும் அந்தந்த மொழிகளைப் பேசுவோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹிந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க அமித் ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ அவசியமோ எங்கிருந்து வந்தது?

மொழிப்போரை திணிக்காதீர்
பிரதமர் ஜவஹர்லால் நேரு ஜனநாயகச் சிந்தனையுடனும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையிலும், ஹிந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலமும் நீடிக்கும் என்கிற உறுதிமொழியை வழங்கினார். அந்த உறுதிமொழிக்கு மாறாக, ஹிந்தியைத் திணிக்க முற்பட்டபோது 1965ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் உயிர்த் தியாகம் செய்த தீரமிகு இளைஞர்களின் வரலாற்றை மறந்து விடவேண்டாம். கட்டாய இந்தியைப் புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் பேட்டி
இதனைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திமுகவை பொறுத்தவரை மொழியை வைத்து வியாபாரம் செய்யக் கூடிய கட்சியாக தான் பார்க்க முடிகிறது. மொழி, இனம் என்பதை ஆயுதமாக எடுத்துக்கொண்டு ஆட்சியில் அமர்ந்த பின் மறந்துவிடுவார்கள். இந்தி என்பது தமிழ்நாட்டில் தேவையில்லாத ஒன்று. 1965ல் மத்திய அரசு இந்தியை புகுத்திய போது, உயிர்த்தியாகம் செய்யப்பட்டு முறியடிக்கப்பட்டது.

இந்தி திணிப்பை ஆதரிக்க மாட்டோம்
இன்றுவரை காங்கிரஸ் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் இருக்க, இந்தி திணித்ததும் ஒரு காரணம். இதனை மத்திய அரசு உணர்ந்திருக்கும். அது மாற்றுக்கருத்து இல்லை. அதேபோல் கட்டாயமாக இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். அதுதான் அதிமுகவின் கொள்கை. ஆங்கிலம் என்பது இணைப்பு மொழி. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் எந்த நிலையிலும் இந்தியை ஆதரிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications