“இதுதான் எங்களுக்கு உண்மையான சுதந்திர தினம்” - ஸ்டாலினைப் பாராட்டும் ‘GiG workers’
சென்னை: சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் ஸ்டாலின் 'GiG worker' களுக்காக தனியே ஒரு நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் உண்மையான சுதந்திரத்தை இப்போதுதான் நாங்கள் அடைந்துள்ளோம் என்று தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல ஆண்டுகால எங்களின் போராட்டத்திற்கு செவி சாய்த்தவர் முதல் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றும் அவர் பெருமிதமாகப் பேசி உள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற 77-வது சுதந்திர தினத்தில் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து நேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் தனது உரையில், "ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ (Ola, Uber, Swiggy, Zomato) உள்ளிட்ட நிறுவனங்களில் பணி புரியும் பணியாளர்களின் (GIG workers) ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு எனத் தனியே ஒரு நல வாரியம் அமைக்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

முதல்வரின் அந்த அறிவிப்பு குறித்து GiG workers என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவித்தற்காகத் தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணாவிடம் பேசினோம். அவர் பல ஆண்டுகளாக எங்களது உள்ளத்தில் கட்டிவைத்திருந்த உள்ளக் குமுறல்களை எந்த அரசும் கேட்கவில்லை என்றவர் மளமளவெனப் பேச ஆரம்பித்தார்.
"இந்தச் சுதந்திர தினம்தான் எங்களுக்கு உண்மையான சுதந்திர தினம். முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்காகத் தனி நலவாரியம் அமைப்பதாகப் புதிய அறிவிப்பு ஒன்றை இந்தச் சுதந்திரதின உரையில் அறிவித்துள்ளார்.

அதைக் கேட்டவுடன்தான் சுதந்திரதினத்தின் முழு அர்த்தத்தையே நாங்கள் உணர்ந்தோம். அதை அறிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் இந்தச் சங்கத்தை நிறுவி, எங்களுக்கான உரிமைகள் வேண்டி குரல் எழுப்பி வருகிறோம். அதற்காகப் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.

அரசு சார்ந்த பல அதிகாரிகளைத்தான் தொடர்ந்து சந்தித்து, கோரிக்கைகளை வைத்துவந்தோம். அதன் பிறகு எங்களது சிஐடியுவில் உள்ள கிட்டத்தட்ட 165 தொழிற்சங்கங்கள் எங்களையும் தொழிலாளர்களாக அங்கீகரிக்கச் சொல்லி கோரிக்கை மனு வைத்தது. அவர்களுக்கும் எங்களது நன்றியை இந்தநேரத்தில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நாங்கள் நடத்திவந்த போராட்டங்களுக்கு எந்த அரசாவது செவி சாய்த்துவிடாதா என நாங்கள் காத்திருந்தோம். முதன்முறையாகத் திராவிட மாடல் அரசு செவிசாய்த்திருக்கிறது.
இதை ஸ்டாலின்தான் செய்வார் என நாங்கள் எதிர்பார்த்தோம். அவர் எங்களுக்குச் சாதகமான ஒரு முடிவை எடுப்பார் என உறுதியாக நம்பினோம். எங்களின் நீண்ட கால கனவைப் புரிந்துகொண்டு ஸ்டாலின் இந்த இனிப்பான செய்தியை எங்களுக்கு அளித்துள்ளார். அவருக்கு எங்கள் ஒவ்வொரு ஊழியர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்கிறார்.

இவரைத்தொடர்ந்து சிஐடியு மாநிலச் செயலாளர் கோபி குமார், "இதற்காகப் பல போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். தற்போது அதற்கான சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஏறக்குறைய தமிழ்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேலான GiG workers இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் இந்த நலவாரியம் ஓரளவுக்கு முன்னேற்றத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறோம்" என்கிறார்.
கொரோனா ஊரடங்கு காலகட்டத்திற்குப் பின்னர் உலக அளவில் புதியதாக உருவெடுத்த தலைமுறைதான் GIG Workers என்பது. அதாவது விரும்பிய நேரத்தில் விரும்பிய வேலையைச் செய்து கொள்வது.

இது அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் என்பதைப் போன்றதுதான். இந்த மாதிரியான தொழில்முறைகளில் வேலை நேரம் என்பது பொதுவாகக் காலை முதல் மாலை வரை இருக்கும்.
ஆனால் GIG Workers என்பவர்கள் தாங்கள் விரும்புகின்ற நேரத்தில் மட்டும் பணிசெய்துவிட்டு, அதற்கான ஊதியம் பெற்றுக் கொள்வார்கள். இது முற்றிலும் புதிய வகை தொழிலாளர் முறை.
ஒரு நிறுவனத்தில் மட்டுமே முழுமையாக வேலை பார்க்கும் முறைக்குப் பதிலாகப் பல்வேறு நிறுவனங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வேலைபார்த்துவிட்டு அதற்காக வருவாயைப் பெற்றுக்கொள்வர். இந்த நடைமுறை தொழிலாளர்கள் உலகளவில் இந்தக் காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றனர்.

இத்தகைய தொழிலாளர்களுக்கு என நலவாரியம் ஒன்றைத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் கிக்' தொழிலாளர் நலன்களுக்கான சட்டத்தை மட்டுமே இயற்றியுள்ளது.
GIG Workers தொழிலாளர்களைப் போலவே 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ வாங்குவதற்காக தலா 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பால் பல பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அது குறித்து சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த எஸ். பால சுப்பிரமணியம் பேசுகையில், "இதற்கு முன்னதாகவே 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து இந்தப் புதிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.

"விளிம்புநிலையில் இருக்கக் கூடிய அதிகம் பேர் ஆட்டோ தொழிலாளிகளாகப் பணி செய்துவருகின்றன. அதில் பலரும் தினக்கூலிகளாகவே இருக்கின்றனர்.
ஆண்களே பல சவால்களை எதிர்கொள்ளும் இந்தத் தொழிலில் பெண்கள், பல நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டுதான் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். அதை எல்லாம் உணர்ந்து முதல்வர் ஸ்டாலின் 500 பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி இருப்பது உண்மையில் பாராட்டத்தக்க அறிவிப்பு. இதை எங்கள் சங்கம் மனதார வரவேற்கிறது" என்கிறார்.
பெண் உயர இந்த மண் உயரும்!












Click it and Unblock the Notifications