சித்ராவின் கழுத்தில் நகக் கீறல்கள்! துடிதுடித்து இறந்த "முல்லை" !
சென்னை: விஜே சித்ரா மர்மமான முறையில் இறந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவருடைய கணவர் ஹேமந்த் என்கிற ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிரான புகார்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். அவர் மீது எத்தனை கொடூர குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சின்னத்திரை நாயகி விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பூந்தமல்லியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் கொலை என சித்ராவின் தாயார் புகார் அளித்திருந்தார். அவர் சித்ரா விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த ஹேமந்த் என்பவருடன் தங்கியிருந்தபோதுதான் இது போன்றதொரு சம்பவம் நடந்தது என சித்ரா தாயார் புகார் கூறினார்.

தனது மகள் உயரத்திற்கு ஃபேனில் தூக்கு போட்டுக் கொள்ள முடியாது என்பது அவரது தாயின் வாதம். மேலும் ஹேமந்த்தான் தனது மகளை அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டுவிட்டதாகவும் சித்ரா குடும்பத்தினர் புகார் கொடுத்திருந்தனர். மேலும் சித்ராவின் கழுத்தில் நகக் கீறல்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறது. அது போல் அவரது கழுத்தில் உள்ள நகக் கீறல்கள் சித்ரா தூக்கிட்டு கொண்ட போது வலி தாங்க முடியாமல் அந்த கயிற்றை அவிழ்ப்பதற்காக முயற்சித்த போது ஏற்பட்ட காயங்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
எனினும் இதை சித்ரா குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். ஏற்கெனவே சித்ராவுடன் ஹேமந்த் பல முறை தகராறில் ஈடுபட்டதாக தாயாரும், சித்ரா ஆண்களுடன் நடிக்கக் கூடாது என கண்டிஷன் போட்டு டார்ச்சர் செய்ததாகவும் அவரது தோழிகள் தெரிவித்தனர். மேலும் சித்ரா , பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் குமரனுடன் ஒரு விஜய் டிவி நிகழ்ச்சியில் நடனமாடினார். அதுவும் ஹேமந்துக்கு பிடிக்கவில்லை.
இதனால் தினம் தினம் சந்தேக கண்ணுடன் சித்ராவை சுற்றி சுற்றி வலம் வந்துள்ளார் ஹேமந்த். திருந்திவிடுவார் என நினைத்த சித்ராவுக்கு ஏமாற்றமே விஞ்சியது. சித்ரா எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் வரத் தொடங்கிவிட்டார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்ராவை காத்திருந்து அவர் யார் யாருடன் நடிக்கிறார் என கண்காணித்து அவரை அழைத்து செல்லும் செயலையும் ஹேமந்த் செய்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று இரவு கூட விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் சித்ரா கலந்து கொண்டார். அது நள்ளிரவு வரை சென்ற நிலையில் அவ்வப்போது சித்ராவுக்கு ஹேமந்த் போன் செய்து டார்ச்சர் செய்தது தெரியவந்தது. மேலும் சித்ராவிடம் அவசர அவசரமாக கையெழுத்து வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த்தை அவருடைய அம்மாவிற்கு பிடிக்கவில்லை என்பதால் தனது கணவருக்காக தாயுடன் சித்ரா மனக் கசப்பில் இருந்ததாகவும் அவருடைய நெருங்கிய தோழிகள் தெரிவித்திருந்தனர். அது போல் சித்ரா மீது கோபம் வந்தாலோ அவர் வேறு ஆணுடன் நட்பு ரீதியிலோ அல்லது பணி ரீதியிலோ பேசிவிட்டால் ஹேமந்த் , சித்ராவை கடித்து வைத்துவிடுவார் என்றும் ஹேமந்தின் நண்பர்களே பேட்டி அளித்திருந்தனர். இத்தனை கொடுமையான புகார்களுக்கு நடுவே ஹேமந்த் இன்று திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications