ஒரே நேரத்தில் 2 டிகிரி படிக்கலாம்! அரசு வேலைக்கு ஏற்ற டிகிரி எது? நல்ல கல்லூரி எது?
சென்னை: +2 படிப்புக்குப் பிறகு என்ன மாதிரியான படிப்புகள் உள்ளன? அதில் சேர்வதன் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா? அது குறித்து வழிகாட்டுகிறது இந்தக் கட்டுரை.
+2 தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. அதைப்போல சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன.

ஆகவே, பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுடன் கல்லூரிகளை நோக்கிப் படை எடுக்கத் தொடங்கி விட்டனர். பலரும் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பங்களை நிரப்புவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
எல்லா கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. இந்த வெயில் காலத்தில் போய் நேரடியாக விண்ணப்பம் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன.
ஆகவே, முடிந்தவரை ஆன்லைன் சேவையை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.
அதன்பிறகு ஒரே ஒரு கல்லூரிக்கு மட்டும் விண்ணப்பம் போட்டுவிட்டுக் காத்திருக்கக் கூடாது. அது தவறு. நீங்கள் வாங்கி உள்ள மதிப்பெண்ணை வைத்து மூன்று விதமான கல்லூரிகளில் மூன்று விதமான படிப்புக்கு விண்ணப்பிப்பது சிறந்தது.

கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் என்ன?
அப்போதுதான் இறுதிக்கட்டத்தில் ஒன்று இல்லை என்றாலும் மற்றொன்று கை கொடுக்கும். மேலும், விண்ணப்ப விநியோகம் முடிந்த பிறகு நீங்கள் எந்தக் கல்லூரிக்கும் விண்ணப்பம் போட முடியாது. அதுவே பிறகு தடைக்கல்லாக மாறிவிடும்.
இந்தியாவில் மொத்தம் 52,627 கல்லூரிகள் உள்ளன. +2 முடித்த பிறகு பல்வேறு படிப்புகள் உள்ளன. இவற்றில் விதவிதமான படிப்புகள் உள்ளன. அதில் எதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது? வருங்காலத்தில் எந்ததுறையில் பற்றாக்குறைகள் உள்ளன என்பதை எல்லாம் ஆராய்ந்து படிப்பில் சேர்வது நல்லது.
குறிப்பாக இந்தியாவில் 7 லட்சத்திற்கும் மேலாகப் பட்டயக் கணக்காளர்களுக்கான தேவை உள்ளது. ஆனால், அந்தளவுக்குப் படித்தவர்கள் நம் நாட்டில் இல்லை.
ஆக, இதைப் போன்ற படிப்புகளில் கவனம் செலுத்துவது எதிர்காலத்திற்கு உதவக் கூடியதாக இருக்கும்.
இதைக் கடந்து பொறியியல் படிப்புகள், வணிகம், அறிவியல், வேளாண்மை மற்றும் மீன்வளம் என நம் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரியானதைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
பொறியியலில் மட்டும் பி.இ., பி.டெக், ஏரோநாட்டிக்கல், ஆட்டோமொபைல் என 15க்கும் மேலான படிப்புகள் உள்ளன.

அதைப்போலவே கடற்சார் படிப்புகள், வானியல், தொழில்நுட்பம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், இந்தியப் பாரம்பரிய மருத்துவப் படிப்புகள், கால்நடை மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டப் படிப்புகள், சி.ஏ. , கட்டடக் கலை சார்ந்த படிப்புகள், விடுதி மேலாண்மை, சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகள் எனப் பல வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
உங்களுக்கு Dual degree பற்றித் தெரியுமா?
ஒரு கல்லூரியில் சேரப் போகிறோம் என்றால், அது எத்தனை ஆண்டுகளாக இயங்கி வருகிறது என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். ஒரு 50 ஆண்டுகளாக ஒரு கல்லூரி இயங்கி வருகிறது என்றால், அதில் படித்துவிட்டு வெளியேறிய மாணவர்கள் பல நிறுவனங்களில் வேலைகளில் இருப்பார்கள்.
அதனால், கல்லூரியின் செல்வாக்கு நல்ல நிலையில் இருக்கும். ஆகவே, வேலைக்கான ஒரு உத்தரவாதம் நாம் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும்போதே கிடைத்துவிடும்.
அதே மாதிரி, பல ஆண்டுகளாக ஒரு கல்லூரி இயங்கி வந்தால், அதன் பாடத்திட்டங்கள் தரமானதாக இருக்கும். அங்கே பேராசிரியர்கள் நல்ல அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

மேலும் லேப் வசதி, தொழில்நுட்ப வசதி என எல்லாம் சிறப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆகவேதான் ஒரு கல்லூரியில் படிக்கப் போகும்போது அதன் காலத்தை நாம் கணக்கிட வேண்டும்.
டாப் கல்வி நிறுவனங்களில் Dual degree படிப்புகள் என்று உள்ளன. ஒரே சமயத்தில் 2 டிகிரிகளை நீங்கள் படிக்கலாம். Mathematics and computer science சேர்த்து இரண்டு பட்டப்படிப்பாகப் படிக்கலாம்.
மேலும் Biology and mechanical என ஒரே நேரத்தில் சேர்த்துப் படிக்கலாம். Economics and Engineering என்ற இரட்டை பட்டப்படிப்பு வெளிநாடுகளில் பொதுவாக உள்ளது. இவை பொதுவான படிப்புகள்.
மாணவர்கள் Dual degree எடுக்கும் போது அந்தச் சுமையைத் தாங்க முடியுமா என யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

அரசு வேலைக்கு ஏற்ற படிப்புகள் எவை?
அரசு வேலைகளை மனதில் வைத்துப் படிப்பவர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் அரசு வேலைக்குச் செல்ல என்ன மாதிரியான படிப்புகளைப் படிக்கலாம் என்பதில் குழம்பிப் போய் உள்ளனர்.
அது குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் சில டிப்ஸ் தருகிறார். அவர், "அரசு வேலைக்காக யுபிஎஸ்சி தேர்வு எழுதிப் போகலாம். அதற்கு எந்த டிகிரி வேண்டுமானாலும் படிக்கலாம்.
இன்ஜினியரிங் படித்து விட்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதலாம். மருத்துவம் படித்தவர்கள் கூட இந்தத் தேர்வை எழுதலாம். வேளாண்மை சார்ந்த படிப்பு படித்துவிட்டுக் கூட பலர் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.
ஆனால், நான் பலருக்கும் சொல்லும் அறிவுரை என்னவென்றால், நமது குடும்ப பொருளாதாரத்தின் நிலைமை எப்படி உள்ளது? அவர்களால் நமக்குச் செலவு செய்ய முடியுமா? பெற்றோருக்கு இதனால் அதிக நிதிச்சுமையை ஏற்படுத்த வேண்டி வருமா? இதை எல்லாம் மாணவர்களாகிய நீங்கள் யோசிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் மன அமைதியோடு கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியும்.
பொதுவாக இந்த வேலைக்காக இதைப் படிப்போம் என ஒரு படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.
முதல் 3 ஆண்டுகால கல்லூரி படிப்பு என்பது நம் அறிவை வளர்த்துக் கொள்வதற்கான படிப்புதான். ஆகவே, அதில் எந்தளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள முடியுமோ அதில் கவனம் செலுத்த வேண்டும்" என்கிறார்.












Click it and Unblock the Notifications