அடுத்த மாதம் சென்னையில் மின்சார பஸ்கள்! ஒரு சார்ஜில் எவ்வளவு தூரம் போகும்? என்னென்ன வசதிகள் இருக்கு?
சென்னை: சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் எம்டிசி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் 5 பஸ் பணிமனையில் இருந்து இருந்து மின்சார தாழ்தள பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இப்பேருந்துகளுக்கான சார்ஜிங் வசதி மேற்கொள்ளும் பணி இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் எம்டிசி தெரிவித்துள்ளது.
சென்னையில் மாநகரப் பேருந்துகள் பயணிகளுக்கு இன்றியமையாத சேவையாக இருந்து வருகிறது. மின்சார ரயில்களுக்கு அடுத்தபடியாக பயணிகள் அதிகம் மாநகர பேருந்துகளையே பயன்படுத்தி வருகிறார்கள். சென்னை மாநகரப் போக்குவரத்து கழகமும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மின்சார தாழ்தள பேருந்து சேவை
அந்த வகையில் சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்பு ஏற்படாத வகையில் எலக்ட்ரிக் பஸ்களை இயக்கவும் எம்டிசி முடிவு செய்தது. இதன்படி 1,110 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக வரும் அடுத்த (ஜூன்) மாதத்தில் மட்டும் 5 பணிமனைகளில் இருந்து 625 மின்சார தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த பேருந்துகளுக்கு மின் சார்ஜிங் வழங்கும் வசதியானது அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. வியாசர்பாடியில் 32 சார்ஜிங் நிலையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மின்சாரம் வழங்கும் வகையில் தலா 34 கிலோ வோல்ட் திறன் கொண்ட 4 மின்மாற்றிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்தால் மட்டும் 250 கிமீ தூரம் வரை இயக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இருக்கைக்கும் சார்ஜிங் பாயிண்டுகள்
பயணப் பாதையை காட்டும் தொடுதிரை வசதி இந்த பேருந்தில் உள்ளது. ஆட்டோமேட்டிக் கார்களை போன்றே இயங்கும் வசதியும் என அதிநவீன வசதிகள் இந்த பேருந்தில் உள்ளது. பஸ் எந்த நிறுத்தம் அருகே வந்துகொண்டிருக்கிறது, அடுத்த என்ன பேருந்து நிறுத்தம் என்பதை பஸ் உள்ளேயும், பஸ்சுக்கு வெளியேயும் பயணிகளுக்கு காண்பிக்கும் வகையில் டிஜிட்டல் பலகைகளும் உள்ளன. 39 பயணிகள் அமர்ந்துகொண்டு பயணம் செய்ய முடியும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள்ன.
இதில் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு இருக்கைக்கும் சீட் பெல்ட் மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பஸ்சில் 7 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள், 3 தீயணைப்பு கருவிகள், எல் இ டி பல்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியார் சொகுசு பேருந்தில் இல்லாத பல்வேறு புதிய வசதிகள் இருக்கிறதாம். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வேகத்தடை வந்தால் கூட அதில் அதிர்வு இருக்காத வகையில் அட்ஜெஸ்மெண்ட் இருக்கிறதாம்.
பயணிகள் மகிழ்ச்சி
மாற்றுத் திறனாளிகள் ஏறி இறங்குவதற்கு வசதியாக படியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கான இருக்கை வசதியும் எளிதில் அடையாளம் காணும் வகையில் காண்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த எலக்ட்ரிக் தாழ்தள பேருந்து சேவைகளை இயக்க உள்ளது.
தற்போது இதற்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் அதாவது இன்னும் சில நாட்களில் சென்னையில் மின்சார தாழ்தள பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications