சென்னை மக்களே! நகரில் இனி டிராபிக் பிரச்சினை இருக்காது! 5 முக்கிய இடங்களில் வரும் புதிய மேம்பாலங்கள்
சென்னை: சென்னையில் போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதைச் சமாளிக்க இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சென்னையில் 5 முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான நேரத்தை டிராபிக் நெரிசலிலேயே கழிக்க வேண்டிய மோசமான ஒரு சூழல் ஏற்படுகிறது.
இப்படி அதிகரிக்கும் டிராபிக் பிரச்சினைக்குத் தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பஸ், மின்சார ரயில், மெட்ரோ எனப் பல பொது போக்குவரத்துகள் உள்ளன.

மெட்ரோ
இவை மக்கள் தங்கள் பயணத்தை எளிமையாக்க உதவுகின்றன. அதிலும் சமீப காலமாக மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ இயங்கி வரும் நிலையில், மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோவை விரிவாக்கம் செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே டிராபிக்கை குறைக்க நகரில் 5 இடங்களில் புதிதாக மேம்பாலங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

மேம்பாலங்கள்
மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்குக் கீழே கட்டப்படும் இந்த ஐந்து புதிய மேம்பாலங்கள், புறநகர்ப் பகுதிகளில் இருந்து வருவோருக்குப் பெரியளவில் பயனுள்ளதாக இருக்கும்.. இந்த மேம்பாலங்களை மாநில நெடுஞ்சாலைத் துறைக்காகச் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் கட்டவுள்ளது. மியாட் மருத்துவமனைக்கு அருகில் 3. 14 கிமீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இது தவிர சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், மஞ்சம்பாக்கம் மற்றும் காட்டுப்பாக்கம் பகுதிகளிலும் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது.

சிஎம்ஆர்எல்
இங்குள்ள போக்குவரத்து நெரிசல்களை இந்த புதிய மேம்பாலங்கள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது புதிதாகக் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ வரும் பகுதிகள் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிஎம்ஆர்எல் தரப்பில் கூறுகையில், "முதலில் மெட்ரோ ரயிலுக்கான பணிகளை நாங்கள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.. அதன் பிறகு மாநில நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து மேம்பாலங்கள் கட்டுவோம்,'' என்றார். முதலாம் கட்ட மெட்ரோ பணிகளில் இதேபோல வடபழனியில் மெட்ரோவுக்கு பின் பாலம் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எந்த இடங்கள்
இப்போது இரண்டாம் கட்ட மெட்ரோவில் திட்டமிடப்பட்டுள்ள 5 மேம்பாலங்களும் முக்கியமான சந்திப்புகளை இணைக்கும். மியாட் மருத்துவமனை அருகே அமையும் மேம்பாலம் இந்த ராமாபுரம் வழியாக முகலிவாக்கம் வரை இருக்கும். 3.14 கிமீ நீளமுள்ள இந்த மேம்பாலம் நகரின் மிக நீளமான மேம்பாலங்களில் ஒன்றாக இருக்கும். அடுத்து மகாபலிபுரம் சாலையில் துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் சந்திப்புகளில் மேம்பாலங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

உயரமான இடம்
இதில் மூன்று மற்றும் ஐந்தாம் வழிதடங்கள் சந்திக்கும் இன்டர்சேஞ்ச் மெட்ரோ நிலையமாக சோழிங்கநல்லூருக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இது சோழிங்கநல்லூருக்கு பதிலாக துரைப்பாக்கத்தில் இந்த இன்டர்சேஞ்ச் மெட்ரோ நிலையம் அமைய வாய்ப்புகள் அதிகம். இங்கு தான் மிக உயரமான தூரத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைய உள்ளது. முதல் லெவலில் மேம்பாலமும், அடுத்த லெலவில் உயர்மட்ட விரைவுச் சாலையும்.. மூன்றாம் லெவலில் மெட்ரோவும் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐடி ஊழியர்கள்
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் முடிவடைந்த பிறகு நகரில் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளை இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ இணைக்க உள்ளதால் சாலைகளில் கார்களின் எண்ணிக்கை குறையலாம். மெட்ரோ அமைக்கப்பட்ட உடனேயே ஐடி ஊழியர்கள் மெட்ரோவுக்கு வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்ற போதிலும், அவர்கள் மெல்ல கார்களை தவிர்த்து மெட்ரோவுக்கு வருவார்கள் என்றே மெட்ரோ தரப்பில் கூறப்படுகிறது.

எச்சரிக்கை
இந்தச் சூழலில் தான் ஐந்து மேம்பாலங்களையும் சேர்த்துக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் தான் இந்த மேம்பாலங்கள் அமைய உள்ளது. இதில் சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் தவிர மற்ற இடங்களில் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் புதிய பாலங்களால் டிராபிக் குறையும் என்பதால் இது பயணிகள் மெட்ரோவுக்கு மாறுவதை ஊக்குவிக்காது என்றும் சில வல்லுநர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications