கையைவிட்டு போன கரும்பு விவசாயி.. இது முதல்முறை இல்லை! நாம் தமிழர் இதுவரை போட்டியிட்ட சின்னங்கள் என்ன
சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை மைக் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த கடந்த காலங்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட சின்னங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
நாம் தமிழர் கட்சியைக் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சீமான் நடத்தி வருகிறார். இருப்பினும், அவர் 2011இல் நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் 2014இல் நடந்த லோக்சபா தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.

அந்த காலகட்டத்தில் அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகத் தமிழகம் முழுக்க தீவிர பிரச்சாரம் செய்தார். 2016ஆம் ஆண்டு முதல் தான் நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது.
இரட்டை மெழுகுவர்த்தி: 2016இல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் தான் நாம் தமிழர் முதல்முறையாகக் களமிறங்கியது. அந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது முதல் அனைத்து தேர்தல்களிலும் அவர் தனித்தே போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவருக்குத் தேர்தல் ஆணையம் 'இரட்டை மெழுகுவர்த்தி' சின்னத்தை ஒதுக்கீட்டு செய்தது. அந்த தேர்தலில் 4,58,104 வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் தமிழகம் முழுக்க 1.07% வாக்குகளைப் பெற்றிருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் களமிறங்கியது. அப்போதும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திலேயே நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அதில் நாம் தமிழர் சார்பில் களமிறங்கிய கலைக்கோட்டுதயம் 3802 வாக்குகள், அதாவது 2.15% சதவிகிதத்துடன் நான்காவது இடம் பெற்றார். தொடர்ந்து 2019இல் நடந்த லோக்சபா தேர்தலிலும் அதேபோல தனித்து போட்டி என்ற நிலைப்பாட்டை நாம் தமிழர் எடுத்தது.
மறுத்த தேர்தல் ஆணையம்: முந்தைய தேர்தல்களைப் போலவே இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை ஒதுக்குமாறு நாம் தமிழர் தேர்தல் ஆணையத்தை அணுகியது. இருப்பினும், நாம் தமிழருக்கு இரட்டை மெழுகுவர்த்தி' சின்னம் வழங்கப்படவில்லை. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இருக்கும் ஒரு மாநிலக் கட்சி தங்களின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக இரட்டை மெழுகுவர்த்தியைப் பெற்றுள்ளதால் அந்த சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
கரும்பு விவசாயி: இதையடுத்து வேறு சின்னத்திற்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அப்போது தேர்தல் ஆணைய சின்னங்கள் பட்டியலில் கரும்பு விவசாயி சின்னம் புதிதாகச் சேர்க்கப்பட்டு இருந்த நிலையில், அந்த சின்னத்தை நாம் தமிழர் கோரிக்கை விடுத்தது. அதன்படி கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழருக்குக் கிடைத்தது. இப்படி தான் கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழருக்குக் கிடைத்தது. அந்த சின்னத்துடன் தான் அவர்கள் 2019 லோக்சபா தேர்தலைச் சந்தித்தனர்.
2021 சட்டசபைத் தேர்தல், அதன் பிறகு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் இதே கரும்பு விவசாயி சின்னத்தில் தான் நாம் தமிழர் போட்டியிட்டது. இந்தச் சூழலில் தான் கரும்பு விவசாயி சின்னமும் இந்த முறை சீமானுக்குக் கிடைக்கவில்லை. தாமதமாகத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்ததால் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இதைத் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர். அது நிலுவையில் இருக்கிறது.
புதிய சின்னம்: இது ஒரு பக்கம் இருக்க புதிய சின்னத்தைத் தேர்வு செய்யும் நடவடிக்கையும் ஒரு பக்கம் எடுக்கப்பட்டு வந்தது. முதலில் ஆட்டோ சின்னத்தை நாம் தமிழர் கட்சி கேட்டதாகவும் இருப்பினும் அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்து. இந்தச் சூழலில் தான் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் இப்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் நாம் தமிழர் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications