ஆட்சிய விட கட்சி முக்கியம்.. திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் “சீரியஸ் அட்வைஸ்” - பேசியது என்ன?
சென்னை: இன்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். அவை என்ன விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி காட்சி வாயிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவின் 72 மாவட்டங்களின் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநில நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தல், திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம், பூத் கமிட்டி, திமுக உறுப்பினர் சேர்க்கை, அரசின் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது என பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய விபரங்கள் வெளியாகி இருக்கிறது. அதில், அவர் ஆட்சி எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட கட்சி முக்கியம் என்றும், இதை அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது.

"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். கட்சி வலுவாக இருக்க வேண்டும். நம்முடைய கவனம் எல்லாம் கட்சியை வலுப்படுத்துவதிலும், தொண்டர்களை உற்சாகமாக வைத்துக்கொள்வதிலும்தான் அதிகமா இருக்க வேண்டும். தொண்டர்கள் யாராவது, எதாவது குறைகள் சொன்னால், என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்துக் கேட்க வேண்டும். அந்தப் பிரச்சினையை தீர்க்க முடியுமா என்று பாருங்கள். குறை சொல்பவர்களிடம் ஆறுதலாக பேசுங்கள்." என முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், மாவட்டச் செயலாளர்களும், பொறுப்பு அமைச்சர்களும் அவரவர் மாவட்டங்களில் இருக்கக்கூடிய பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளிடம் குறைகளைக் கேட்டு, அதை நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்றும், குறைகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும்கூட, அதை சரிசெய்ய முயற்சி செய்து அது பற்றி அவர்களின் தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளாராம்.
"நமது குறைகளை கேட்பதற்கு ஆள் உள்ளது என்ற நம்பிக்கை வந்தாலே, பலருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும். மனதில் இருக்கும் பெரிய பாரம் குறைந்துவிடும். மாவட்டச் செயலாளர்களும் பொறுப்பு அமைச்சர்களும் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளிடம் அனுசரணையாக நடந்துகொண்டால்தான் அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்ப்பார்கள்." என்று ஸ்டாலின் அறிவுறுத்தியதாக பேசப்படுகிறது.

இயக்கம் என்பது தலைமை தொடங்கி, கடைக்கோடி தொண்டன் வரை உளப்பூர்வமாக பிணைந்திருக்கும் அமைப்பு என்றும், ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொருவருக்கும் ஆதரவும் அன்பும் இருக்க வேண்டும் எனவும், எந்த மட்டத்திலும் சுணக்கமோ மனவருத்தமோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவருடையல்லாரோட பொறுப்பு என ஸ்டாலின் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு தொண்டனும், இது 'நம்முடைய ஆட்சி' என்று பெருமைப்படும் வகையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், அப்படி அவர்கள் இருக்கிறார்களா என்று நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்திய ஸ்டாலின், அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால், ஏன் இல்லை என்ற காரணத்தை ஆராய்ந்து பார்த்து சரி செய்ய வேண்டும்." எனவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications