திடீரென தவறிய அப்பா.. நடிகர் விஜய் போன் போட்டு சொன்ன வார்த்தை.. தவெகவின் ராஜ்மோகன் உருக்கம்
சென்னை: பிரபல பேச்சாளரான ராஜ்மோகன் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துள்ளார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் தான் தனது தந்தை இறந்தபோது விஜய் செய்த செயலை பற்றி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஓராண்டு முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்தி முடித்தார்.

இந்த மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அவரது ரசிகர்கள் கட்சி தொண்டர்களாக வந்தனர். தவெக கட்சி தொடங்கப்பட்டு இருந்தாலும் கூட 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தான் களம் காண்கிறது. இதனை விஜய் ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டார்.
இப்போது மாவட்ட வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணி மற்றும் நிர்வாகிகள் நியமனத்தில் நடிகர் விஜய் ஆர்வம் காட்டி வருகின்றன. தவெகவில் நிர்வாக ரீதியாக மொத்தம் 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான மாவட்ட செயலாளர்கள், இணை செயலாளர்கள், பொருளாளர், துணை செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு இணைந்தனர். அவர்களுக்கு பதவி வழங்கப்பட்டது. அதேபோல் பிரபல பேச்சாளரும், யூடியூபருமான ராஜ்மோகனுக்கும் தவெகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் தவெகவின் முதல் அரசியல் மாநாட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு தனது தந்தை இறந்ததாகவும், அந்த சமயத்தில் விஜய் தனக்கு போன் செய்து பேசியது பற்றி உருக்கமாக ராஜ்மோகன் கூறியுள்ளார். இதுபற்றி அவர், ‛‛மாநாட்டுக்கு ஒரு சில நாட்கள் இருந்தன. அப்போது அப்பா தவறிவிட்டார். என் வாழ்வின் துயரமான நிகழ்வு அது.
அந்த சமயத்தில் விஜய் சார் எனக்கு பலமுறை போன் செய்து ஆறுதல் கூறினார். தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். இத்தனைக்கும் அப்போது மாநாட்டுக்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அவ்வளவு பரபரப்பான சூழலிலும் எனக்கு போன் செய்து நீங்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம். குடும்பத்தோடு இருங்கள் என்று கனிவோடு கூறினார் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் இன்று ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதவில், அவர் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தவெக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளரின் போட்டோ உள்ளது. அதில் நன்றி, எங்களை நம்பி பொறுப்புகள் தந்த பொதுச்செயலாளருக்கும், தலைவருக்கும் Thank You என எழுதப்பட்டுள்ளது.
அதோடு அந்த பதிவில் ராஜ்மோகன் ‛‛நான் அரசியல் குடும்பத்தில் வாரிசு இல்லை. பொருளாதார பின்புலம் இல்லை. எனக்கும் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு! ஆட்டோ ஓட்டுநர், மன்ற நிர்வாகி, மருத்துவர் முதல் மாற்று திறனாளி வரை.. அதிகார பகிர்வு கொடுக்கிறது தமிழக வெற்றிக் கழகம்!'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications