20.. 40.. 45.. எடப்பாடி களமிறக்கும் "ஆபரேஷன்".. ஓபிஎஸ் கனவில் மண்ணை அள்ளி போடும் பரபர பார்முலா!
சென்னை: அதிமுக சட்ட விதிகளில் இருக்கும் சில பிரிவுகளை பயன்படுத்தி ஓ பன்னீர்செல்வத்திற்கு செக் வைக்க எடப்பாடி பழனிசாமி முயன்று வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஒற்றைத்தலைமை கூடாது ; இரட்டை தலைமையே தொடரவேண்டும், பொதுச்செயலாளர் பதவியில் யார் அமர்ந்தாலும் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றெல்லாம் பிளிறியிருக்கிறார் ஓபிஎஸ்!
இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று இதுவரை நடந்த கூட்டங்களிலும் ஓ பன்னீர்செல்வம் கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார். இவரின் இந்த செய்தியாளர் சந்திப்பு அதிமுக நிர்வாகிகள் இடையே பரபரப்பை கூட்டி உள்ளது!

ஓ பன்னீர்செல்வம்
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வைக்கவும், எடப்பாடியை பொதுச்செயலாளர் ஆக்கவும் எடப்பாடி டீம் தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறதாம். இதற்காக ஆர்பி உதயகுமார், காமராஜ் ஆகியோர் அவரிடம் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சட்டரீதியாக எடப்பாடியால் சாதிக்க முடியுமா? இதில் ஜெயிக்கப்போவது இபிஎஸ்சா? ஓபிஎஸ்சா? என்கிற விவாதங்கள் அதிமுகவில் சூடுபிடித்திருக்கிறது. அதிமுகவின் சட்டவிதிகள் இதற்கெல்லாம் இடமளிக்கிறதா? வாருங்கள் பார்க்கலாம்.

சட்ட விதிகள்
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1-ந்தேதி அதிமுக தலைமையகத்தில் கட்சியின் செயற்குழுவை அதிமுக தலைவர்கள் கூட்டினர். அந்த செயற்குழுவில் தான், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் ஆகிய இருவருக்கும் வானளாவிய அதிகாரத்தை வழங்கும் வகையில் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றினர். சசிகலாவிற்கு இடமளிக்கவே கூடாது என்ற திட்டத்தில் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதிகாரம் என்ன?
அதன்படி அதிமுக சட்டவிதிகள் 20(2), 40, 45 ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வந்தனர். அப்படி திருத்தப்பட்ட விதிகளின் படி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை ஓட்டு மூலம் இணைந்தே தேர்ந்தெடுப்பர். கட்சியின் சட்டவிதிகளை நீக்கவும், ஏற்றவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்றிருந்ததை (விதி எண்: 43) , விதிகளை நீக்கவும், ஏற்றவும், திருத்தவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு என்று மாற்றியமைத்தனர்.

பொதுக்குழு மாற்ற முடியாது
அதாவது, திருத்தவும் என்கிற வார்த்தை புதிதாக சேர்த்தனர். அதேசமயம், ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் ஒற்றை வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் மாற்றவோ திருத்தவோ பொதுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் கட்சி விதிகளை திருத்தினர். அதாவது பொதுக்குழு மூலம் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்தில் மாற்றம் செய்ய முடியாது.

மாற்றவே முடியாத விதி
சட்ட விதி 45 படி கட்சியின் சட்டவிதிகளை தளர்த்துவதற்கும், விதி விலக்கு அளிப்பதற்கும் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் கட்சி உறுப்பினர்கள் மூலம் வாக்களித்து தேர்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் தளர்த்தவோ, விதிவிலக்களிக்கவோ இவர்கள் இருவருக்கும் அதிகாரம் இல்லை என்று திருத்தம் செய்தனர். அதாவது ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் நினைத்தால் கூட அவர்களின் நியமன விதிகளில் மாற்றம் செய்ய முடியாது.

மூன்று திருத்தம்
அதாவது ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் நியமன விதியை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது. இப்படி மூன்று வகையான திருத்தங்கள் அன்றைய செயற்குழுவில் முன்மொழியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால், இவைகளுக்கு பொதுக்குழுவின் அங்கீகாரம் வேண்டும். இன்றைய வரையில், அதற்கான அங்கீகரமோ ஒப்புதலோ பெறப்படவில்லை. அந்த ஒப்புதலை பெறுவதற்காகத் தான் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டப்படுகிறது. எனவே இந்த விதிகள் இன்னும் அமலுக்கு வரவில்லை.

அதிகாரம் இன்னும் இல்லை
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்திருத்தங்களுக்கு பொதுக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டிருந்ததால்தான், இரட்டைத் தலைமைக்கு அதிகாரம் வரும். ஆனால், ஒப்புதல் பெறப்படாததால், பொதுக்குழுவே அதிகாரம் பெற்றதாக ஆகிவிடுகிறது. இதன் மூலம் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கவும் பொதுக்குழுவிற்கு அதிகாரம் வந்துவிடுகிறது. அவர்களின் தேர்வு முறைகளையும் பொதுக்குழு மாற்ற முடியும்.

எடப்பாடி பிளான்
இந்த நிலையில், இரட்டைத்தலைமைக்கு வானளாவிய அதிகாரம் தரப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட விதிகளுக்கு இதுவரை பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறப்படாதை வைத்துதான் தனது ஆசையை நிறைவேற்ற திட்டமிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்களால் அவருக்கு நெருக்கமானவர். அதாவது இரட்டை தலைமை என்பதை எல்லாம் நீக்கி மீண்டும் பொதுக்குழு மூலம் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர அவர் முயன்று வருகிறார் என்கிறார்கள் அதிமுகவினர். அதனை இப்போது வரை தடுத்து நிறுத்த முயன்று வருகிறார் ஓபிஎஸ். அதாவது பொதுக்குழுவில் எப்படியாவது இந்த சட்டங்களை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் தீவிரமாக முயன்று வருகிறாராம்.












Click it and Unblock the Notifications