"யாருக்கும் அடிபணிய கூடாது".. அதிமுக மீட்டிங்கில் பளீரென பேசிய இபிஎஸ்.. கூட்டத்தில் என்ன நடந்தது?
சென்னை: அதிமுக சார்பாக இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.. சசிகலா தினமும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று நடந்த அதிமுக கூட்டத்தில் அதற்கு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று சசிகலா வேகமாக செயல்பட்டு வருகிறார். தினமும் ஒரு ஆடியோ என்று பல்வேறு அதிமுக உறுப்பினர்களிடம் போனில் பேசி, அதை இணையத்திலும் வெளியிட்டு வருகிறார்கள்.
சசிகலாவின் ஆடியோக்களுக்கு அதிமுக எப்படி பதிலளிக்க போகிறது, இதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதில் அளிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று அதிமுக கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

முடிவு
இன்று அதிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சசிகலாவுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கம்: சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சசிகலாவுடன் சின்ன தொடர்பு இருந்தால் கூட அவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை என்பதை இபிஎஸ் - ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

நீக்கம்
அதோடு சசிகலாவுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 பேர் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

என்ன பேசினார்
இந்த மீட்டிங்கில் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் சூடாக பேசியதாக கூறப்படுகிறது. சசிகலா கட்சிக்குள் வருவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது போல பேசி இருக்கிறார். நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனால் இதை பயன்படுத்திக்கொண்டு சசிகலாவை உள்ளே விட்டால் நாம் யாருமே சுதந்திரமாக இருக்க முடியாது, கண்ட்ரோல் நம்மிடம் இருக்காது என்று இபிஎஸ் நேரடியாக பேசி உள்ளார்.

என்ன சொன்னார்
அதோடு, உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகள், நற்பெயரை அழிக்கும் நச்சுக்களை அனுமதிக்க கூடாது. அவர்கள் தினசரியும் விநோத நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். நாம் பெரிய இயக்கமாக இருக்க வேண்டுமே தவிர, யாருக்கும் அடிபணிந்து போக கூடாது, முக்கியமாக ஒரு குடும்பத்திற்கு அடிபணிந்து போக கூடாது, என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார்.

பணிவு
முக்கியமாக நமக்குள் பிரச்சனை இருந்தால் சரி செய்து கொள்ளலாம், ஆனால் சசிகலா வந்தால் கட்டுப்பாடு நம்மிடம் இருக்காது என்று இபிஎஸ் கூறியதை ஓபிஎஸ்ஸும் ஒப்புக்கொண்டதாகவே தெரிகிறது. இப்போது கட்சியில் இருக்கும் வாய்சை இழக்க கூடாது என்று எல்லோரும் இந்த முடிவிற்கு சம்மதித்து இருக்கிறார்கள். இன்று ஓபிஎஸ் கொஞ்சம் இறங்கி வந்ததற்கும் இதுவே காரணம் என்கிறார்கள்.

காரணம் என்ன
அதிமுகவை கைப்பற்றும் சசிகலாவின் திட்டத்திற்கு கிட்டத்தட்ட வைக்கப்பட்ட பெரிய செக் இது என்கிறார்கள். சசிகலாவின் கனவிற்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம் இது என்கிறார்கள். சசிகலாவுடன் அதிமுகவினருக்கு எந்த விதமான தொடர்பும் இருக்க கூடாது என்பதால் எடப்பாடி பழனிசாமி இப்படி பளீரென பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications