"இதை நாம் உடனடியாக செய்யணும்" டக்குனு மா.சு பக்கம் திரும்பி.. நிர்மலா சீதாராமன் சொன்ன விஷயம்
சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்தார்.
சென்னையில் அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சீனா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ள நிலையில், நமது நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழர்கள் மக்கள் எப்போதும் தங்கள் மொழியை அளவு கடந்து நேசிப்பார்கள். எனவே, நாம் மருத்துவக் கல்வியைத் தமிழில் கற்பிக்க வேண்டும். மருத்துவக் கல்வி என்பது மருத்துவம் பற்றியது மட்டுமில்லை.. அது நர்சிங் அல்லது பல் மருத்துவர் போன்ற பிற பாடங்களும் அடங்கும். இவை தமிழ் மொழியில் கிடைத்தால் நமக்கு நல்லது தான். இதில் ஆய்வு செய்யவும் கூட நமக்கு வாய்ப்புகள் அமையும்.

தமிழ் மொழி கல்வி
இதை நான் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நான் அதைச் சொல்கிறேன். மருத்துவக் கல்வியை வலுப்படுத்த வேண்டும்.. மருத்துவக் கல்விக்கு நல்ல அடித்தளம் இருக்க வேண்டும்.. மருத்துவக் கல்விக்கு நல்ல அடித்தளம் இருந்தால் தான் பெரியளவில் சாதிக்க முடியும். எனவே, அதைத் தமிழ் மொழியில் நாம் வழங்க வேண்டும். நான் இப்படிச் சொல்வதால் உடனே நாங்கள் ஆங்கிலத்திற்கு எதிரான நபர் என்று நினைக்கத் தேவையில்லை. தமிழ் மொழியில் பாடங்களைக் கற்பித்தால் நமக்குப் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்றே சொல்கிறேன்.

எதிர்ப்பு வராது என நினைக்கிறேன்
நான் தமிழ்நாட்டில் மாநில சுகாதார அமைச்சரிடம் தான் இதைச் சொல்கிறேன். இதனால் இதற்கு எந்தவொரு எதிர்ப்பும் வராது என்றே நினைக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். சமீபத்தில் தான் மத்தியப் பிரதேசத்தில் இந்தியில் மருத்துவ பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோல அனைத்து மாநில மொழிகளிலும் மருத்துவ பாடங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதற்காகத் தமிழ்நாட்டில் தனிக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா
தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "இன்று சீனா, ஜப்பான், கொரியா நாடுகளுடன் ஒப்பிடும் போது, நாம் கொரோனாவை கையாள்வதில் சிறந்த நிலையில் உள்ளம்.. நாடு முழுக்க கொரோனா வேக்சின் பணிகள் மிகச் சிறப்பாக நடந்தது. நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இப்போது நம்மிடம் மூக்கு வழியே செலுத்தும் வேக்சின் உள்ளது. இது நமக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தாக இருக்கும். நமது மருத்துவ வரலாற்றில் நாம் செய்த மிக முக்கிய சாதனையாக இது இருக்கிறது. எனவே, அச்சம் கொள்ளத் தேவையில்லை.

மருத்துவமனைகள்
மருத்துவம் படிக்கும் மாணவர்கள், நகரங்களில் மட்டும் இருக்காமல், அனைத்து பகுதிகளுக்கும் சென்று வேலை செய்ய வேண்டும். கிராமங்களிலும் நமக்கு மருத்துவமனைகள் தேவை. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் போதிய மருத்துவமனைகள் இருப்பதில்லை. இந்த நிலையை மாற்ற மத்திய அரசு பல்வேறு நிதியுதவிகளை அளித்து வருகிறது. ஒவ்வொரு நகரத்திலும் மருத்துவமனைகள் நமக்கு தேவை. இதற்காகவும் கூட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மருத்துவத் துறை
மருந்துகள் துறையில் இந்தியா முக்கிய இடத்தை எட்டியுள்ளது. மருந்து ஏற்றுமதி 2014இல் 11.6 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இப்போது அது 24.6 பில்லியன் டாலராக எட்டியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள 50% மருந்துகள், அமெரிக்காவுக்கு 40% மருந்துகள், பிரிட்டனுக்கு 25% மருந்துகளை நாம் தான் சப்ளே செய்கிறோம். அதேபோல முக்கிய சிக்கலான ஆப்ரேஷன் செய்யவும் பலரும் இந்தியா வருகின்றனர். 78 நாடுகளில் இருந்து சுமார் 20 லட்சம் நோயாளிகள் இந்தியா வருகிறார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications