"மேடையிலேயே கண்டித்தாரா அமித் ஷா.." உண்மையில் என்ன நடந்தது.. தமிழிசை தந்த பரபர விளக்கம்
சென்னை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவின் போது தமிழிசையை உள் துறை அமைச்சர் அமித் ஷா கண்டித்தாக வீடியோ பரவிய நிலையில், இது தொடர்பாக அவரே விளக்கமளித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார். இதையடுத்து அவர் நேற்று புதன்கிழமை ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார்.

விஜயவாடாவில் நடந்த இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடந்த ஒரு சம்பவம் தான் இணையத்தில் பேசுபொருள் ஆனது.
தமிழிசை: அதாவது சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் என்டிஏ கூட்டணியில் இருக்கும் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டர். அப்போது மேடையில் அமித் ஷா மற்றும் வெங்கையா நாயுடு பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்குச் சென்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பார்த்து வணக்கம் தெரிவித்தார். முதலில் அமித் ஷாவும் வணக்கம் தெரிவித்தார்.
பிறகு தமிழிசை அங்கிருந்து கிளம்பும் போது அவரை அழைத்த அமித் ஷா அவரிடம் ஏதோ கூறுகிறார். அந்த வீடியோவை பார்க்கும் போது அமித் ஷா அதிருப்தியை வெளிப்படுத்துவது போல இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி இணையத்தில் பேசுபொருள் ஆனது.
விரலைக் காட்டி கண்டிப்பு: தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டிப்பது போல கையால் சைகையைக் காட்டுவதாகவும் இதற்குத் தமிழிசை பதில் அளிக்கும் போது ஏற்காமல் அதற்கு அமித் ஷா மறுத்துப் பேசுவதாகவும் இணையத்தில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டனர். கடந்த வாரம் தான் தமிழிசை செய்தியாளர்களிடம் பேசும் போது பாஜகவில் இருக்கும் சிலரே இணையத்தில் தன்னை பற்றி அவதூறாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருவதாகவும் முன்னாள் மாநில தலைவர் என்ற அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்பது போலப் பேசியிருந்தார்.
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு இது தொடர்பாகவே அமித் ஷா கண்டித்து இருக்கலாம் என்றும் இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகவே பலரும் பல வித கருத்துகளை இது குறித்துக் கூற தொடங்கினர். அதேநேரம் தமிழிசை இது தொடர்பாக எந்தவொரு கருத்தும் கூறாமல் இருந்தார்.
விளக்கம்: அந்த வீடியோ இணையத்தில் பரவி பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாகத் தமிழிசை சவுந்தரராஜனே விளக்கமளித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷாவின் பக்கங்களை டேக் செய்து அவர் இந்த ட்வீட்டை செய்துள்ளார்.
இது தொடர்பாக பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில், "நேற்று நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் சந்தித்தேன். அப்போது அவர் தேர்தலுக்கு பிந்தைய சூழல், களத்தில் உள்ள சவால்கள் பற்றி என்னிடம் கேட்டார். மேலும், அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளைக் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பான தேவையற்ற யூகங்களுக்கு விளக்கம் அளிக்கவே இதைப் பதிவிட்டுள்ளேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
நெட்டிசன்கள்: அதேநேரம் இந்த விளக்கத்தை நெட்டிசன்கள் சிலர் ஏற்க மறுத்தே வருகிறார்கள். தொகுதி பணிகளைக் கவனிக்குமாறு சொன்னார் என்றால் பிறகு அமித்ஷா ஏன் முறைக்க வேண்டும் என்றும் விரலைக் காட்டி கண்டிப்பது போல ஏன் பேச வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications