தாம்பரம் தனியார் மருத்துவமனையில் பெண் அதிகாரிக்கு பிரசவத்தின் போது என்ன நடந்தது.. உறவினர்கள் ஆவேசம்
சென்னை: சென்னை அடுத்த திருநீர்மலையை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருடைய மனைவி சரண்யா என்பவர் கோபாலபுரம் கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். 2வது முறை கர்ப்பம் தரித்திருந்த சரண்யா ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
பிரசவத்தின்போது மரணம் ஏற்படுவதைத் தடுப்பது, மகப்பேறு சுகாதாரத்தில் மிக முக்கியமானது ஆகும். கர்ப்பிணிகளைப் பதிவு செய்தல் முதல் குழந்தைப் பேறு வரை தொடர்ச்சியாகக் கண்காணிப்பதன் வாயிலாகவே பிரசவகால மரணங்களை குறைக்க முடியும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. என்னதான் கண்காணித்தாலும் திடீரென பிரசவத்தின் போது பெண்கள் உயிரிழப்பது அவ்வப்போது நடக்கிறது.

நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளிட்ட அதிக ஆபத்து கொண்ட கர்ப்பிணிகளைத் தொடர்ந்து கண்காணிக்காமல் விட்டால் அவர்கள் இறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதய பாதிப்பு உள்ள பெண்களே பெரும் ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அதேநேரம் கர்ப்பிணிகள் சுகப்பிரசவத்தின் போது, அதிக ரத்தப்போக்கு காரணமாக இறப்பதும் அவ்வப்போது நடக்கிறது. அப்படித்தான் தாம்பரத்தில் பெண் அதிகாரி உயிரிழந்துள்ளார்.
சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலையை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி சரண்யா (வயது 35). சரண்யா சென்னை கோபாலபுரம் கூட்டுறவு பண்டகசாலை மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். மோகன்ராஜ் சரண்யா தம்பதிக்கு 7 வயதில் மகன் உள்ளார். 2-வதாக கருவுற்ற சரண்யா தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சரண்யா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்
இந்நிலையில் சரண்யாவிற்கு சுக பிரசவமாக குழந்தை பிறந்தது. ஆனால் சரண்யா அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நேரம் செல்ல செல்ல சரண்யா குறித்த எந்த தகவலையும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே அவரது கணவர் மற்றும் உறவினர்கள் சரண்யா இருந்த பிரசவ அறைக்கு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. ஆத்திரம் அடைந்த 50-க்கு மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடி முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். உயிரிழந்த சரண்யா உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications