துணை குடியரசு தலைவர் தேர்தலே வந்துடுச்சே.. ஜெகதீப் தன்கர் எங்கே போனார்? ஆளையே காணோமே? ஷாக்!
சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தார். அவர் மார்ச் மாதத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரின் இந்த திடீர் ராஜினாமாவிற்கு பின் பல காரணங்கள், உள் விவகாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது துணை குடியரசு தலைவர் தேர்தலே அறிவிக்கப்பட்டுவிட்டது, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டார்கள். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கிறது.

குடியரசுத் துணை தலைவர் தேர்தல்
இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்த திட்டம் என தகவல் வெளியாகி வருகிறது. NDA சார்பில் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்ட நிலையில் திருச்சி சிவாவை நிறுத்த பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளனர். அதில் திருச்சி சிவாவை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஜெகதீப் தன்கர் எங்கே?
ஆனால் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பின் வெளியே வரவே இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பது அரசியல் தலைவர்களுக்கும் தெரியாத புதிராக உள்ளது. அவர் தனது சொந்த வீட்டில் இல்லாததால் அவருக்கு நெருக்கமான சில காங்கிரஸ் தலைவர்கள் அவர் எங்கே என்று தேடும் நிலை ஏற்பட்டு உள்ளது.
முன்னதாக 74 வயதாகும் தன்கர் தனது உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தன்கர், "என் ஆரோக்கியத்திற்கு, உடல்நிலைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும், மருத்துவ ஆலோசனையின்படி இந்திய அரசியலமைப்பின் 67(a) பிரிவின்படி, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
74 வயதான தன்கர், ஆகஸ்ட் 2022-ல் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2027 வரை இருந்தது. துணை ஜனாதிபதி என்பதால் அவர் ராஜ்யசபாவின் தலைவராகவும் இருந்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் அவரது ராஜினாமா செய்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்கர் - மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவி
துணைக் குடியரசுத் தலைவராக தன்கர் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவி வகித்துள்ளார். ஜூலை 23 அன்று ஜெய்ப்பூருக்கு அவர் மேற்கொள்ளவிருந்த அதிகாரப்பூர்வ பயணம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் அவர் ராஜினாமா செய்தார். நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான கண்டனத் தீர்மானம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையெழுத்திட்ட கடிதம் தனக்குக் கிடைத்ததாக அவரே நாடாளுமன்றத்தில் அறிவித்தது அரசாங்கத்திற்கு ஆச்சரியத்தை அளித்தது.
யாரிடமும் சொல்லாமல் ராஜினாமா?
இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். பலரிடமும் தெரிவிக்காமல்.. தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுக்க எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ராஷ்டிரபதி பவனுக்கு தன்கர் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் சில எதிர்க்கட்சி தலைவர்களுடன் தன்கர் சமீப காலமாக நெருக்கமாக இருந்ததாகவும் செய்திகள் பரவின. கடந்த சில வாரங்களுக்கு மல்லிகார்ஜுன் கார்கேவை அவர் சந்தித்து பேசியுள்ளார், மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் விருந்து அளித்துள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பின் வெளியே வரவே இல்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பது அரசியல் தலைவர்களுக்கும் தெரியாத புதிராக உள்ளது. அவர் தனது சொந்த வீட்டில் இல்லாததால் அவருக்கு நெருக்கமான சில காங்கிரஸ் தலைவர்கள் அவர் எங்கே என்று தேடும் நிலை ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications