கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களில் 2ஆவது இடத்தில் தமிழகம்.. இதுவரை நடந்தது என்ன?
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது நிலையில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது முதல் இன்று வரை அது கடந்து வந்த பாதை என்ன? என்பதை பார்ப்போம்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,640 ஆக உள்ளது. அது போல் இறந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உள்ளது. கொரோனா பாதித்த மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரம் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் கேரளா இருந்தது.
தற்போது கேரளாவை தமிழகம் முன்னேறி சென்றுவிட்டது. இது தமிழக மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

கண்டறிதல்
தமிழகத்தில் கொரோனா முதலில் எப்போது கண்டறியப்பட்டது என்பதை பார்ப்போம். தமிழகத்தில் முதல்முறையாக கடந்த மார்ச் 7-ஆம் தேதி கொரோனாவால் முதல் நபர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மார்ச் 18-ஆம் தேதி, மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் தலா 3 பேர் என மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12ஆக இருந்தது. 23-ஆம் தேதி வரை ஒருவர், இருவர், மூவர் என கண்டறியப்பட்ட நிலையில் மார்ச் 24-ஆம் தேதி முதல் முறையாக 6 பேருக்கு கொரோனா உறுதியானது. மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவும் 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஊரடங்கு
24ஆம் தேதி முதல் மாலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து மார்ச் 25-ஆம் தேதி மதுரை நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டது.

ஒருவர் உயிரிழப்பு
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அன்றைய தினமே 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின்னர் மார்ச் 27-ஆம் தேதி 9 பேரும், மார்ச் 28-ஆம் தேதி 4 பேரும், மார்ச் 29-ஆம் தேதி 8 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மார்ச் 30-ஆம் தேதி முதல் நாள்தோறும் பாதிப்போரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கத்திற்கு வந்தது. ஆம் அன்று ஒரே நாளில் 17 பேர் பாதிக்கப்பட்டனர். அடுத்த நாள் மார்ச் 31-ஆம் தேதி 57 பேர் பாதிக்கப்பட்டனர்.

ரூ. 1000 வழங்கும் திட்டம்
இந்த நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது இரட்டை இலக்கத்திலிருந்து மூன்று இலக்கத்திற்கு வந்துவிட்டது. ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதியானது. நேற்று முன் தினம் ஒரே நாளில் 75 பேருக்கும் நேற்றைய தினம் 102 பேருக்கும் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே 7 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ 1000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications