மணிப்பூரில் நடப்பது இனஅழிப்பு.. பாஜகவை பகிரங்கமாக குற்றம்சாட்டி.. சசிகாந்த் செந்தில் பேட்டி
சென்னை: மணிப்பூரில் இன்று நடப்பது, நாளை எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் நடக்கலாம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி சசிகாந்த் செந்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் மைத்தேயி இனத்தவரை, எஸ்டி பட்டியலில் சேர்க்க அம்மாநில ஆளும் பாஜக அரசு முயற்சித்தது. இதற்கு மணிப்பூர் உயர்நீதிமண்ற தீர்ப்பும் அடிப்படையாக இருந்தது. ஆனால் மணிப்பூரில் பழங்குடியினத்தவராகிய குக்கி, நாகா இன மக்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு போராட்டம் மிகப் பெரும் இன மோதலாக வெடித்தது. குக்கி இனத்தின் ஆயுதக் குழுவினர் மைத்தேயி மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர்.

இதனால் ஒரு மாத காலத்துக்கும் மேலாக மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மணிப்பூரில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மைத்தேயி இன மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். குக்கி இனத்தவரும் அகதிகளாக தொப்புள் கொடி உறவுகள் உள்ள மிசோரம் மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக குஹவாத்தி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜய் லம்பா தலைமையில் விசாரணை குழு அமைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.. இந்த விசாரணை ஆணையமானது மணிப்பூர் வன்முறை தொடர்பாக விசாரித்து விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் வன்முறை தொடர்பான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான சசிகாந்த் செந்தில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மணிப்பூரில் இன்று நடப்பது, நாளை எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் நடக்கலாம்.கடந்த ஒரு மாதமாக பல விஷயங்களை நாம் இந்த உலகத்தில் விவாதித்து வருகிறோம். முக்கியமான விஷயங்கள் மனிதநேயமற்ற செயல்கள் இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி சரியான விவாதங்கள் வெளியே வரவில்லை.
அதை பற்றி விவாதங்கள் வர வேண்டும் என்கின்ற காரணத்திற்காக செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்பது ராகுல்காந்தியினுடைய எண்ணம். இது எதை பற்றி என்றால் மணிப்பூரில் நடக்கின்றன பெரிய போராட்டதை பற்றியது தான். மே மாதமே இதுபற்றி விவாதங்கள் வந்தது. அந்த நேரம் கர்நாடாகவில் தேர்தல் நடைபெற்று கொண்டிருந்தது. நாங்களுமே கர்நாடகா தேர்தலில் இருந்தோம். எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. மணிப்பூரில் ஒரு இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த காலக்கட்டத்திலும் இப்படி நடக்குமா என்ற ஒரு ஆச்சர்யமான பார்வை இருக்கலாம்.
ஆனால் மணிப்பூரில் நடந்துள்ளது. அங்கு எந்த விதமான இணையதள வசதிகளும் இல்லை. பத்திரிக்கையாளர்கள் உள்ளே செல்வதற்கும் பல தடைகள் இருக்கிறது. சுமார் 40 ஆயிரம் மக்கள் அவர்களின் வீடுகளை இழந்து காடுகளுக்கு அவர்கள் ஓடிவிட்டார்கள். ஏன் இது மிகவும் முக்கியம் என்றால், மணிப்பூரில் நடந்தது, இந்தியாவில் எந்த பகுதியிலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இதுபோன்ற மதவாத அரசியல் நடக்கும் போது, என்ன மாதிரியான பாதிப்பு உண்டாகும் என்பதற்கு மணிப்பூர் ஒரு சிறந்த உதாரணம்.

பழங்குடியினர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனையாக இதை திசைதிருப்பும் முயற்சி நடக்கிறது. ஆனால் 2017ம் ஆண்டு முதல் மணிப்பூரில் மதவாத அரசியலை வந்து முன்னெடுத்து வைத்துள்ளார்கள் பாஜகவினர். ஒட்டுக்மொத்த பழங்குடியினர் பிரிவினரை கிறிஸ்தவர் என்று சொல்லி டார்க்கெட் செய்து, இந்து தேசியவாதத்தை வளர்த்து, அதற்கு அரசாங்கமே துணை போனதால், இன்று ஒரு இன அழிப்பு என்கிற நிலைக்கு வந்திருக்கிறது. எந்த ஒரு இன அழிப்பும் அரசாங்கத்தின் உதவி இல்லாமல் செய்ய முடியாது. நான் ஒரு கலெக்டராக இருந்துள்ளேன். எனக்கு தெரியும்.
இது அரசாங்கத்தினுடைய உதவியோடு தான் நடக்கிறது. அந்த மாதிரி மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கிறது. இன்று மணிப்பூர் போனீர்கள் என்றால், மணிப்பூர் மக்களுக்கு யார் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாத நிலைமையில் இருக்கிறார்கள். எல்லோரும் ஆயுதம் ஏந்திவிட்டார்கள். காவல் நிலையங்களை சூறையாடி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். நேற்று மாலையில் 4 பேர் இதுபோல் துப்பாக்கிச்சூட்டில் இறந்திருக்கிறார்கள்.
இந்த நாட்டில் மக்களுக்கு போய் சேர வேண்டிய உண்மையான விஷயங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணமே மத்திய அரசுக்கு கிடையாது. மூடி மறைக்க வேண்டும் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கிறது. நம்மை வேறுவேறு விஷயங்களில் கவனத்தை திசைதிருப்பிவிட்டு, முக்கியமான விஷயத்தை பேசவிடாமல் வைப்பது இங்கு வழக்கமாகவே போய்விட்டது. இனஅழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இம்பாலுக்கு யாருமே போக முடியாது. இம்பாலில் நடப்பதை அங்கு மட்டுமே பார்க்க முடியும். அங்கு நடப்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்"இவ்வாறு சசிகாந்த் செந்தில் கூறினார்.












Click it and Unblock the Notifications