விஜய் சொன்னது சரியா? ‘நீட்’டை ஒழிக்க ஈசி வழி இதுதான்! பாயிண்டை பிடித்த டாக்டர்!
சென்னை: தவெக தலைவர் விஜய் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக மத்திய அரசு சிறப்பு பொதுப் பட்டியல் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்று சொன்ன கருத்து மிகப் பெரிய விவாதமாகியுள்ள நிலையில், அது குறித்து மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்திரநாத் சில விளக்கங்களை அளித்துள்ளார்.
கடந்த வாரம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை அழைத்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி இருந்தார் விஜய். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசும் போது 'நீட்' விவகாரம் குறித்து கருத்து எதுவும் கூறவே இல்லை என்ற விமர்சனம் சமூக வலைத்தளங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விழாவில், அவர் நீட் விவகாரம் பற்றிய தனது கொள்கை முடிவு என்ன என்பதை விளக்கிப் பேசி இருந்தார்.

விஜய் பேசும் போது, "நீட் தேர்வினால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே, அது கூடாது. நீட் மாநில உரிமைக்கு எதிராக உள்ளது. ஆகவே, கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். முன்பு மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. அதை மாற்றிவிட்டார்கள். இதற்கு தீர்வு ஏற்படுபவரைச் சிறப்பு பொதுப்பட்டியலை உருவாக்க வேண்டும். அதன் மூலம் முழு சுதந்திரம் மாநில அரசுக்கு வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
உடனே பாஜகவினர் மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் பலர் இவர் திமுகவின் குரலாகப் பேசத் தொடங்கி இருக்கிறார் என்று ஒரு கருத்தை முன்வைத்து விவாதிக்கத் தொடங்கினர். இன்று ஊடகத்தினரைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "ஆதாரத்தின் அடிப்படையில் தான் நாங்கள் நீட் தேர்வை ஆதரித்து வருகிறோம். தமிழகத்தில் இதுவரை எத்தனை பேர் நீட் தேர்வினால் பயனடைந்துள்ளனர் என்ற வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். விஜய் அவரது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். யார் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டும் எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. திமுக சார்ந்த அரசியலை விஜய் கையில் எடுக்கப் போகிறார் என்றால் வெல்கம், நோ பிராபளம். விஜய் திமுகவின் அரசியலைக் கையில் எடுத்தால் பாஜக மட்டும் களத்தில் தனித்து நிற்கும். அது எங்களுக்குச் சந்தோஷம்தான்" என்று கூறியுள்ளார்.
விஜய் பேசவில்லை என்றதும் விமர்சனம் செய்தவர்கள் இப்போது பேசிய பிறகு வேறு மாதிரியான கருத்தை முன்வைக்கின்றனர். விஜய் குறிப்பிட்டுச் சொல்லும் பொதுப் பட்டியல் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். 1975 இல் நாடு முழுவதும் இந்திரா காந்தி அரசு அவசரநிலையைப் பிரகடனம் செய்தது. அப்போது அரசமைப்புச் சட்டம் 57 ஆவது பிரிவில் 42வது சட்டம் திருத்தப்பட்டது.
அதன் மூலம் மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து மத்திய அரசு பறித்தது. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி மற்றும் சுகாதாரம் பற்றிய கொள்கை முடிவுகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக மாநில அரசு முடிவு எடுக்க முடியாது என்று அறிவித்தது.
இதற்கு முன்பாகவே துறைமுகம், பணம், நீதி, சுகாதாரம் ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. இந்தத் திருத்தத்தால் கல்வியும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
விஜய் முன்வைக்கும் சிறப்பு பொதுப் பட்டியல் யோசனை பற்றி சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் ரவீந்திரநாத் பேசுகையில், "இப்போது உள்ள தேசிய மருத்துவ ஆணை சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்துவிட்டால் போதும், நீட் தேர்வை ஒழித்துவிடலாம். அப்படி ஒரு திருத்தம் வரும்பட்சத்தில் எந்தெந்த மாநிலங்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்கின்றனவோ அதைக் கொடுக்க முடியும். ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் வலியுறுத்தலால்தான் இந்த நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
ஆகவேதான் இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற ஒன்றைக் கொண்டுவந்துவிட்டார்கள். இந்தத் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நீட் தேர்வு நடத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆகவே, நீட் தேர்வை நம்மால் தடுக்க முடியவில்லை. ஆகவே அதில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் நீட் தேர்வை நிறுத்திவிடலாம். ஆகவே விஜய் சொல்வதைப் போல நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தனியாகச் சிறப்பு பொதுப் பட்டியல் எல்லாம் தேவையில்லை. இந்தச் சட்டத் திருத்தம் செய்தாலே போதும்" என்கிறார்.

இதைப்போன்று மூத்த பத்திரிகையாளர் மணி, "ஏற்கெனவே பொதுப் பட்டியலில் உள்ள உரிமையைத் திரும்பப் பெற முடியாமல் மாநில அரசுகள் தவிக்கின்றன. அப்படி இருக்கும் போது இப்போது எதற்கு தனியாகச் சிறப்பு பொதுப் பட்டியல்? விஜய் புரிந்துதான் சொல்கிறாரா? இந்த யோசனையை யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. விஜய் நீட்டை எதிர்த்து கருத்துச் சொன்னது சரி. அதை வேண்டாம் என்றதும் சரி.
ஆனால், யார் இந்த சிறப்பு பொதுப் பட்டியல் என்ற ஒரு ஐடியாவை கொடுத்தார்கள் என்பது கேள்வி. இப்படிப் பேச்சுகள் அவரை முட்டுச் சந்தில் போய்தான் நிறுத்தும். இந்த மாதிரியான இடங்களில் அவர் சரிந்து விழுகிறார். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு இதன் மூலம் அவர் ஆளாகப் போகிறார்" என்கிறார்.












Click it and Unblock the Notifications