பதவியில் இருப்பாரான்னு பாருங்க.. ஆர்.என் ரவிக்கு எதிராக ஸ்டாலின் போடும் பிளான்.. இதுதான் சீக்ரெட்டா?
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசின் அடுத்த பிளான் என்ன? ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு என்ன மாதிரியான எதிர்ப்பை பதிவு செய்ய போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு எப்படி காய் நகர்த்த போகிறது என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் ஒன்இந்தியா யூ டியூபிற்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் திமுகவிற்கு இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக நியமன பதவியில் இருக்கும் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை பற்றியும், கொள்கைகள் பற்றியும் பேசி வருவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
முக்கியமாக ஆளுநர் அரசியல் கொள்கைகளை பற்றி பேசுவதுதான் திமுகவின் கோபத்திற்கு காரணம் ஆகி உள்ளது. இது தொடர்பாக இன்று குடியரசுத் தலைவரிடமும் திமுக எம்பிக்கள் குழு மனு கொடுத்துள்ளது.

பேட்டி
இந்த நிலையில் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு எப்படி காய் நகர்த்த போகிறது என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் ஒன்இந்தியா யூ டியூபிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஆளுநர்தான் சட்டசபையில் பிரச்னையை ஆரம்பித்தார். தமிழ்நாடு அரசு ஆரம்பிக்கவில்லை. திமுக இந்த பிரச்னையை ஆரம்பிக்கவில்லை. தமிழ்நாட்டை செதுக்கிய பெரியார், அண்ணா, கருணாநிதி, காமராஜர் பெயரை இவர் சொல்லவில்லை. அதற்கு நாங்கள் அவையில் பதிலடி கொடுத்தோம். வாரிசு அரசியல் வாரிசு அரசியல் என்று சொல்கிறார்களே பாஜகவினர்.. ஜெய் ஷா மட்டும் எப்படி தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஆகிறார். அவருக்கு மட்டும் எப்படி பதவி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அமித் ஷா மகன் என்பதை தவிர அவருக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது.

கிரிக்கெட்
அவர் என்ன கிரிக்கெட் ஆடினாரா? அது வாரிசு இல்லையா? வாரிசு அரசியலின் மொத்த உருவம் பாஜக. வாரிசு அரசியலை விட மோசமானது பாஜக, வாரிசு அரசியலை விட பாஜகவின் ஆர்எஸ்எஸ் அரசியல் மோசமானது. அவர்கள்தான் மொத்தமாக நாட்டையே கட்டுப்படுத்துகிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் ஆக முடியும். அவர்கள்தான் பாஜகவின் கொள்கைகளை கட்டுப்படுத்துகிறார்கள். எவ்வளவு ஆபத்தான விளைவுகளை அது ஏற்படுத்தும். அதுதான் பிரச்சனை. வாரிசு அரசியல் பிரச்சனை.

சட்டங்கள் ஒப்புதல்
சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநர் போடும் பிச்சை அல்ல. அவரின் கடமை அது.சட்டசபையில் ஒரு சட்டம் வருகிறது என்றால் அது கட்சி இயற்றுவது அல்ல. மக்கள் இயற்றுவது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் இயற்றும் சட்டம் அது. இந்த மக்களை அவமதிக்கிறார் ஆர். என் ரவி. தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்துகிறார் ஆர். என் ரவி. நாங்கள் வந்த புதிதில் அவருடன் இணக்கமாகத்தான் இருந்தோம். என்ன உடனே மசோதாக்களை அவர் நிறைவேற்றிவிட்டாரா? நீட் மசோதாவிற்கு எப்படி எல்லாம் அலைய வைத்தார். நீட் மசோதாவை அவர் தானே திருப்பி அனுப்பினார்.

எவ்வளவு
அவர் எவ்வளவு கீழ் தரமாக நடந்து கொண்டார். சட்டத்திற்கு புறம்பான வகையில் அவர் தானே செயல்பட்டார். ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. அவருக்கு எதிரான எதிர்ப்பை நாங்கள் தீவிரப்படுத்துவோம். அவர் மேஜையில் இருக்கும் மசோதாக்களில் கையெழுத்து போடுவதுதான் அவரின் வேலை. அதற்குத்தான் அவர் சம்பளம் வாங்குகிறார். ஆன்லைன் ரம்மி மக்களின் உயிரை கொடுக்கிறது. அதை அவர் ஏற்கவில்லை. அவர் எவ்வளவு ஈவு, இரக்கம் இன்றி செயல்படுகிறார். என்ன கேவலம் இது.

தவறு
அவர் என்ன சொல்லி பிரமாணம் எடுக்கிறார். தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் நலன் இதுதான்? அவர் ஏன் இப்படி செயல்படுகிறார் என்று ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும். அவரிடம் மைக்கை நீட்டி கேளுங்கள். அவர் ஏன் கையெழுத்து போடவில்லை என்று கேளுங்கள். அவர் அவரின் அதிகாரத்தை மீறி நடந்து கொண்டு இருக்கிறார். அவர் இப்படி சட்டங்களை ஊறுகாய் போட்டுகொண்டு இருக்கிறார். அது சட்ட விரோதம். அவர் பொது இடங்களுக்கு வரும் போது அவரிடம் கேள்வி கேளுங்கள். மக்கள் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கோரிக்கை
மக்களின் கோரிக்கையைத்தான் திமுக சட்டமாக நிறைவேற்றி உள்ளனர். அதை பாஜக தடுத்து வைத்து உள்ளது. பாஜக திமுகவிற்காக என்ன செய்து உள்ளது. தமிழ்நாடு, திராவிடம் என்றாலே இவர்களுக்கு கசக்கிறது. இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சாவக்கார், கோல்வாக்கர். சமத்துவத்தை கடைபிடிக்கும் யாரையும் இவர்களுக்கு பிடிக்காது. முதல்வர் அடுத்து என்ன செய்ய வேண்டும் ஆலோசனை செய்வார். அவரின் அடுத்த பிளான் என்ன என்று பார்க்கலாம். அவர் இதில் என்ன போகிறார் என்று விரைவில் தெரிய வரும். ரவி எத்தனை நாட்களுக்கு பதவியில் இருப்பார் என்று பார்க்கலாம். ஜல்லிக்கட்டு, விவசாய போராட்டத்தில் பின்வாங்கிய பாஜக, இதிலும் மக்கள் எதிர்ப்பால் பின்வாங்கும், என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications