நயன்தாரா இருக்கட்டும்.. வாடகை தாயால் குழந்தை பெற்றால் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு-தமிழக அரசு
சென்னை: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, தாய்க்கு எத்தனை நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
விக்கி- நயன்தாரா திருமணம் கடந்த சில மாதங்களுக்குத் திருமணம் செய்து கொண்டனர். மிகப் பிரம்மாண்டமாக நடந்த இந்தத் திருமணத்தில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்குத் திருமணம் நடந்து சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் விக்னேஷ் சிவன் செய்த ட்வீட் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விக்கி நயன்தாரா
அதாவது ''நயனும், நானும் அம்மா, அப்பாவாக ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு உள்ளோம்" என்று பதிவிட்டு இருந்தார். இதன் பின்னர் எங்குப் பார்த்தாலும் வாடகைத் தாய் விவகாரம் பேசுபொருள் ஆனது. பலரும் வாடகைத் தாய் என்றால் என்ன? இந்தியாவில் வாடகைத் தாய் முறைக்கு உள்ள சட்டங்கள் என்றே பலரும் தேடி வருகின்றனர். இதனிடையே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மகப்பேறு விடுப்பு
தமிழ்நாட்டில் மகப்பேறு விடுமுறை என்பது அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் கடந்த 2016இல் 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு பின், 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இந்த தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பிரசவத்துக்கு முன், பின் என இந்த விடுப்பைப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.. இந்த காலகட்டத்தில் முழு சம்பளமும் வழங்கப்படும்.

எவ்வளவு நாட்கள்
இதற்கிடையே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு மகப்பேறு விடுப்பு உண்டா என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.. வாடகைத் தாய் மூலம் குழந்தை மிகுந்த கவனத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மகப்பேறு விடுப்பு அவர்களுக்கும் பொருந்தும். தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமையியல் துறை, "குழந்தையைப் பராமரிக்க அரசு பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்" என்று உத்தரவிட்டு உள்ளது.

விதிமுறை என்ன
விக்கி- நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நிலையில், ஒரு பக்கம் அவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில் விக்கி- நயன்தாராவிடம் வாடகைத் தாய் விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்து உள்ளது. கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பாகவே விவாதம் நடந்து வருகிறது

சட்டங்கள்
தனது கருப்பையில் குழந்தையைச் சுமக்க முடியாத பெண்ணின் கருமுட்டையை எடுத்து அவரது துணையின் விந்தணு உடன் சேர்த்து உருவாக்கப்படும் கருவை மற்றொரு பெண் சுமந்து குழந்தை பெற்றுக் கொடுப்பதே வாடகைத் தாய் முறையாகும். அப்படி குழந்தையைச் சுமந்து பெற்றெடுக்கும் பெண்ணே வாடகைத் தாய் என்று அழைக்கப்படுவார். இந்தியாவில் வாடகைத் தாய் முறைக்கு பல்வேறு சட்டங்கள் உள்ளது.

உறவினர்
குறிப்பாகக் கருவுற முடியாத பெண்கள் மட்டுமே இந்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். மேலும், தம்பதிக்குத் திருமணமாகிக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். குழந்தையைச் சுமக்கும் பெண் உறவினராக இருக்க வேண்டும்.. மேலும், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே குழந்தை இருக்க வேண்டும். ஒரு பெண் ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும்.












Click it and Unblock the Notifications