தங்க நகை அடகு.. ஆண்டு கடைசியில் வட்டி கட்ட போறீங்களா.. அப்படி என்றால் இது உங்களுக்கு தான்
சென்னை: தங்க நகைகளை இன்று அடகு வைக்காத வீடுகள் அபூர்வம். அடகு வைப்பதும், அதை திருப்புவதும், திரும்பவும் தேவைப்படும் போது அடகு வைப்பதும் பல வீடுகளில் தொடர்கிறது. ஏதாவது சிக்கல் வந்தால் உடனே பணமாக்க பலர் தேர்வு செய்வது தங்கம்தான்.. தங்கம் விலை நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது. அதனால் அடகு வைத்த தங்கத்தை மீட்க சரியான வழிகளை பின்பற்றாவிட்டால் இழக்க வேண்டியது வருகிறது. தங்க நகைகளை எளிதாக திருப்ப சில எளிமையான விஷயங்களை பின்பற்றலாம்.
பெண்களுக்கு சீதனமாக பணமோ, நிலமோ தருவதைவிட, தங்கத்தை தான் அந்த காலத்தில் சீதனமாக தந்தார்கள். ஏனெனில் பணத்தின் மதிப்பு 10 வருடங்களில் குறைந்துவிடும்.. அதேபோல் நிலத்தின் மதிப்பு ஏறினாலும், உடனே விற்று பணமாக்க முடியாது.. அல்லது அன்றைக்கு இப்போது உள்ளது போல் ரியல் எஸ்டேட் தொழில் அந்த அளவிற்கு வளரவில்லை. எனவே தங்கம் தான் அன்றைக்கு சீதனமாக தரப்பட்டது.

தங்கம் இன்று வரையிலும் சீதனமாக வழங்கப்படுகிறது. ஒரு குண்டுமணி தங்கம் இல்லாமல் திருமணம் நடைபெறுவது என்பது சாத்தியமே இல்லை என்கிற அளவிற்கு உள்ளது. தங்க நகைகளை பெற்றோர்கள் அவரவர் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் பிள்ளைகளுக்கு செய்கிறார்கள்.. அதேபோல் வற்புறுத்தி வரதட்சணையாக தங்கம் வாங்குவதும் நடக்கிறது
தங்க நகைகள் இருந்தால் சிக்கலான காலத்தில் பெரிய உதவியாக இருக்கிறது. இன்றைக்கு தனிநபர் கடன் எல்லாருக்கும் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் வட்டி அதிகம்... அதுமட்டுமல்ல, தனிநபர் கடன் வாங்கிய அடுத்த மாதம் முதலே இஎம்ஐ ஆரம்பித்துவிடும். ஆனால் தங்க நகை கடனை பொறுத்தவரை மாதம் மாதம் பணம் கட்ட தேவையில்லை.. மொத்தமாக கூட ஓராண்டு முடிவில் வட்டி கட்டிவிட முடியும். ஆனால் தனிநபர் கடன் அப்படி இல்லை.. மாதம் மாதம் கட்டியாக வேண்டும்..
அதேநேரம் தங்க நகைக்கடனை பொறுத்தவரை பலர் செய்யும் தவறு.. கடைசி நேரத்தில் போய் வட்டியை மொத்தமாக கட்டிவிட்டு மறு அடகு வைக்கிறார்கள்..இது நடைமுறையில் அவர்களுக்கு எளிதாக தோன்றினாலும் பின்னாளில் நகையை திருப்ப பெரிய சிரமமாக இருக்கிறது.. எனவே நகைக்கடனை தனிநபர் கடன் போல் பாவித்து கட்ட நினைக்க வேண்டும்.. மாதம் மாதம் வட்டி எவ்வளவு என்பதை வங்கியில் கேட்க வேண்டும்.. அதை குறித்துக் கொண்டு, அந்த பணத்தையும், அத்துடன் பணத்தை கணிசமாக கூடுதலாக கட்டலாம்..
உதாரணத்திற்கு ஒரு லட்சம் தங்க நகைக்கடனை ஓராண்டிற்கு வாங்கினால் மாதம் 900 என்கிற அளவில் வட்டி இருக்கும் (வங்கியை பொறுத்து மாறுபடும்). அத்துடன் கூடுதலாக 6000 அல்லது 6500 என்கிற அளவில் கட்ட தொடங்கினால், ஆண்டு இறுதியில் வட்டி அசல் என எல்லாமே குறைந்து மிக குறைந்த பணம் கட்டினால் போதும் என்று வரும்.. அதன்பின்னர் நகைகளை எளிதாக திருப்பலாம். உங்கள் கையில் எவ்வளவு பணம் இருந்தாலும் நகைக்கடனுக்கு போய் பணத்தை கட்டுங்கள். பலர் சேமித்து கடைசியில் நகையை திருப்பலாம் என நினைக்கிறார்கள்.. உண்மையில் நம்முடைய நுகர்வு பொருளாதார சூழலில் ஏதாவது செலவு நம்மை அறியாமலேயே வந்து கொண்டே இருக்கும்.. இதை தடுக்க முடியாது.
எனவே மாதம் பிறந்தால் தங்க நகை கடனுக்கும் இஎம்ஐ போல் நினைத்து கட்டி வாருங்கள். மீதமுள்ள பணத்தில் குடும்பத்திற்கு செலவு செய்யலாம்.. இப்படி செய்தால் தான் நகைகளை எளிதாக மீட்க முடியும். ஏனெனில் நீங்கள் நினைத்த பார்க்க முடியாத செலவுகள் உங்களை தேடி எப்போதுமே வரும். சேமிப்புக்கான தொகைகளை எடுத்து வைத்துவிட்டே நீங்கள் செலவுகளை ஆரம்பிக்க வேண்டும். செலவு போக சேமிப்பு என்றால், கடைசியில் ஒன்றுமே மிஞ்சாது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்..












Click it and Unblock the Notifications