‘மிஸ்டர் க்ளீன்’ ஜெயம் ரவிக்கு என்ன பிரச்சினை? விவாகரத்து எண்ணம் அதிகரிக்கிறதா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன? ஏன் இதைப் போன்று விவாகரத்து மனநிலை அதிகரித்து வருகிறது என்பது பற்றி மனநல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு சில மாதங்களாகவே கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் புகைந்து கொண்டிருந்த ஒரு விசயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதற்காகக் காரணங்கள் தனிப்பட்டவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

திரை பிரபலங்கள் விவாகரத்து செய்வது இது ஒன்றும் முதல்முறையல்ல. வழக்கமான ஒன்றுதான். ஆனால், அந்த செய்தி வெளியாகும்போது பரபரப்பாகப் பேசப்படும். அதன்பின்னர் அடங்கிவிடும். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது மனைவி சைந்தவியைப் பிரிந்தபோது அந்த விவகாரம் அதிகம் பேசப்பட்டது. இந்த ஜோடி காதலித்து மணம் புரிந்துகொண்டவர்கள். கல்யாணம் கூட தடபுடலாக நடந்தது.
அதேபோல்தான் ஜெயம் ரவிக்கும் காதல் மனைவிதான். அழகான குடும்பம் என்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெயர் எடுத்த ஜோடி. கிட்டத்தட்ட சினிமாவில் நடிக்கத் தொடங்கியதிலிருந்து மிஸ்டர் கிளீன் என்று பெயர் எடுத்தவர் ரவி. அவரது நண்பர்களான ஆர்யா, விஷால் எனப் பலர் கிசுகிசுக்களில் சிக்கியபோதுகூட ரவி எந்த விவகாரத்திலும் சிக்கியது இல்லை. அந்தளவுக்கு நல்ல பையன் என சினிமா உலகம் அவரை பார்த்து வியந்தது.
ஆனால், அவரது விவாகரத்துக்குப் பின்னால் இப்போது பல கிசுகிசுக்கள் வந்து கொண்டுள்ளன. ஒரு நடிகையுடன் தொடர்புப்படுத்தி பலர் பேசிவருகின்றனர். வழக்கமாக ஒருவர் விவாகரத்து செய்தியை வெளியிடும் போது இதே மாதிரியான கிசுகிசுக்கள் வருவது வாடிக்கை. தனுஷ் அவரது விவாகரத்தை அறிவித்தபோதும் இதேபோல் பேச்சுகள் எழுந்தன. ஆனால், அவர் மறுமணம் பற்றி யோசிக்காமல் தன் மகன்களுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
உண்மையில் ஜெயம் ரவி தனது மனைவியைப் பிரிந்ததற்குப் பின்னால் காதல் விவகாரம் மட்டுமே காரணம் இல்லை என்றும் சொல்கிறார்கள். அவரது மனைவியின் தரப்பின் கட்டுப்பாட்டுக்கு ரவி சென்ற பிறகு வெளியான திரைப்படங்கள் அனைத்தும் அவருக்கு மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்தன. அதற்குக் காரணம், ரவியின் கால்ஷீட்டை கவனிக்கும் பொறுப்பை ஆர்த்தி குடும்பம் எடுத்துக் கொண்டது. அவர்கள் கதைகளைக் கேட்டுத் தேர்வு செய்ய ஆரம்பித்தனர்.
அதில் சரியான அனுபவம் இல்லாததால், படங்கள் தோல்வியைத் தழுவின. அந்தப் பழி என்னவோ ஜெயம் ரவி மீதுதான் விழுந்தது. குறிப்பாகச் சொல்லப்போனால், 'தனி ஒருவன் 2' எடுப்பதற்காக அவரது அண்ணன் கால்ஷீட் கேட்டும் கொடுக்க முடியாத சூழல் ரவிக்கு ஏற்பட்டுள்ளது. தனி ஒருவன் செம ஹிட். அப்படி இருந்தும் அதன் 2 பாகத்தில் நடிக்கவிடாமல் தடுத்துள்ளனர் மனைவியின் வீட்டார்.
மேலும் திருமணத்திற்குப் பிறகு ரவி தனது வீட்டிலிருந்து முற்றிலும் விலகி இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ரவியின் அப்பா எடிட்டர் மோகன் தனது பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்தவர். ஆடம்பரம் விரும்பாத எளிமையானவர். ஆனால், அதற்கு அப்படியே மாறான குடும்பம் மருமகள் ஆர்த்தி குடும்பம். இந்த விலகல் கூட விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்கிறார்கள். எது எப்படியோ ஒரு அன்பான ஜோடி தனது பிரிவை அறிவிக்க வேண்டிய சூழல் தமிழ் சினிமா வட்டாரத்திற்குள் நடந்துள்ளது.
இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் வேண்டாம் என்றுதான் குழந்தை பெற்ற பிறகு கல்யாணம் செய்து கொண்டுள்ளார் எமி ஜாக்சன். இதற்கு முன்பாக சீரியல் நடிகை ஷாலினி என்பவர் தனக்கு விவாகரத்து நடந்தபோது அதை மகிழ்ச்சியாக போட்டோஷூட் போட்டுக் கொண்டாடி இருந்தார்.
மனநல மருத்துவர் ஷாலினி, "முன்பு எல்லாம் திருமணம் நடந்துவிட்டால் அதற்காகப் பல விஷயங்களை விட்டுக் கொடுத்துத் தாங்கிக் கொண்டு வாழ்வார்கள். அப்படி வாழ்ந்தாலும் அதில் ஒரு மகிழ்ச்சி இருக்காது. சமூகத்திற்குப் பயந்து அந்த வேதனையை அனுபவித்து வருவார்கள். இன்று அப்படி இல்லை. கணவன் மனைவியாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும்போது அவர்கள் அதற்கு முக்கியத்துவம் அளித்துப் பிரிந்து செல்லும் முடிவை எடுக்கிறார்கள். இதனால் கலாச்சாரம் மாறிவிட்டது. விவாகரத்து அதிகமாகிவிட்டது என்று சிலர் அலறுவார்கள். அதில் உண்மை இல்லை. பெரும்பாலும் விவாகரத்து முடிவுக்குப் பின்னால் பெற்றோர்கள்தான் இருக்கிறார்கள். அதைத்தாண்டிதான் தனிப்பட்ட காரணங்கள் வருகின்றன.
எப்படி ஆடம்பரமாக அலங்காரம் செய்து திருமணத்திற்குப் போட்டோ ஷூட் செய்கிறார்களோ, அதேபோல விவாகரத்தின்போது போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுகிறார்கள். இது இரண்டுமே சரியான மனநிலை இல்லைதான். இன்றைய தலைமுறை எதையுமே ஒரு கொண்டாட்டமாக எடுத்துக் கொள்கிறார்கள். பெண் சுதந்திரம், உரிமை என்பதைத் தேவையற்ற விசயங்களில் பொருத்திப் பார்க்கிறார்கள். அதை பெரும்பாலான பெண் வீட்டைச் சார்ந்த பெற்றோர்கள் செய்கிறார்கள். என் மகள் ஏன் இதைப் பொறுத்துக் கொண்டு வாழ வேண்டும்? என்று பேசி விவாகரத்திற்கு அழுத்தம் தருகிறார்கள். இப்படிப் பல காரணங்கள் விவாகரத்திற்குப் பின்னால் இருக்கிறது" என்கிறார்.
எது எப்படியோ, இன்று ஜெயம் ரவியின் பிறந்தநாள். இந்த ஆண்டு என்னவோ அவருக்கு மறக்க முடியாத ஒரு பிறந்தநாளாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications