வீடியோ எடுத்த மருத்துவமனை பெண் ஊழியர் பணி நீக்கம்.. நடிகர் அஜித் காரணமா?.. நடந்தது என்ன?
சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக வந்த நடிகர் அஜித்தை வீடியோ எடுத்ததால் அங்கு பணியிலிருந்து பெண் ஊழியர் நீக்கப்பட்டதாக தகவல்கள் வரும் நிலையில் கொரோனா ஆட்குறைப்பால் வேலையிலிருந்து நீக்கியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் பர்சானா. இவர் தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவர்களின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் அந்த மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது அஜித்தின் தீவிர ரசிகையான பர்சானா , அஜித்தை வீடியோ எடுத்துள்ளார்.

மருத்துவமனை நிர்வாகம்
இதை சிசிடிவி கேமரா மூலம் மருத்துவமனை நிர்வாகம் பார்த்துவிட்டது. பின்னர் அவரது செல்போன் பறிக்கப்பட்டது. எனினும் அந்த வீடியோ எப்படியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதையடுத்து பர்சானா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மருத்துவமனை
இதுகுறித்து பர்சானா கூறுகையில் இந்த சம்பவத்திற்கு பிறகு நான் ஒன்றரை மாதங்களாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தேன். மருத்துவமனை அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டேன் என்றார். பின்னர் அஜித்தின் மனைவி ஷாலினியின் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவமனை நிர்வாகம் பர்சானாவுக்கு பணி வழங்கியது.

ஷாலினி
பின்னர் எந்த வேலையும் கொடுக்காமல் பணி நீக்கம் செய்துவிட்டதாகவும் கூறுகிறார் பர்சானா. இதையடுத்து மருத்துவமனை தரப்பிடமும் ஷாலினியிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். இதையடுத்து ஷாலினியிடம் பர்சானா போனில் பேசியுள்ளார்.

பணிநீக்கம்
அப்போது அஜித்தை வீடியோ எடுத்ததற்காக உங்களை பணி நீக்கம் செய்யவில்லை என்றும் கொரோனா ஆட்குறைப்பால் நிறைய ஊழியர்களை பணிநீக்கம் செய்தபோது உங்களையும் நீக்கிவிட்டதாகவே மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் கூறியதாக ஷாலினி விளக்கியுள்ளார். இவரை போல நிறைய ஊழியர்கள் ஷாலினியிடம் உதவி கேட்டுள்ளதாக ஷாலினி கூறியுள்ளார்.

கல்விச் சான்றுகள்
வங்கிக் கடனை காரணம் காட்டி கல்விச் சான்றுகளை மருத்துவமனை நிர்வாகம் தர மறுத்துள்ளதாக பர்சானா கூறியுள்ளார். இதனால் வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை என்கிறார். இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலையில்லாமல் தவித்து வந்த பர்சானா, நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

குழந்தையின் படிப்பு
முதலில் அஜித்திடம் பேசி நிவாரணம் வாங்கித் தருவதாக கூறிய சுரேஷ் சந்திரா பிறகு முடியாது என தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பர்சானா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து பர்சானா கூறுகையில் குழந்தையின் படிப்புக்கு வேண்டுமானால் உதவி செய்ய அஜித்திடம் கேட்கிறேன் என கூறிவிட்டார்.

வேலை
ஆனால் நான் அவரிடம் உதவியை கேட்கவில்லை, அஜித் சாரை பார்க்க உதவுமாறு கேட்டேன். என் வேலை மீண்டும் கிடைத்தால் போதும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் சுரேஷ் சந்திராவே என்னிடம் அஜித் உதவுவார், பள்ளிக் கட்டணம் செலுத்துவார், குழந்தை பெரிய ஆளாக்கிவிடலாம், நீங்கள் கவலைப்படாதீர்கள் என சொல்லிவிட்டு இப்போது என்னை ஏமாற்றிவிட்டார்.

தற்கொலை
இதையடுத்து ஒரு ஆடியோ மெசேஜை ஷாலினி, எங்கள் மருத்துவர், சுரேஷ் சந்திரா, சித்ரா லட்சுமணன் ஆகியோருக்கு அனுப்பினேன். யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இதையடுத்து சுரேஷ் சந்திரா என்னை பிளாக் செய்துவிட்டார். இதனால்தான் நான் தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.

மருத்துவமனை
இதுகுறித்து சுரேஷ் சந்திரா கூறுகையில் பர்சானா பணிநீக்கத்திற்கு அஜித் காரணமில்லை. மருத்துவமனை நிர்வாகமே சிசிடிவி கேமராவை பார்த்துவிட்டு நடவடிக்கை எடுத்தார்கள். பாதிக்கப்பட்ட பர்சானாவின் குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முயற்சிக்கிறோம். ஆனால் இதற்கு பர்சானா தரப்பில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றார். மேலும் வாடிக்கையாளராக வந்த நடிகர் அஜித்தை வீடியோ எடுத்தது விதிமீறல் என மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.












Click it and Unblock the Notifications