கொஞ்சம் அமைதியா இருங்கண்னே! ‘மாஜி’க்களுக்கு அட்வைஸ் கொடுத்த எடப்பாடி! அமைதியோ அமைதி.. என்ன காரணம்?
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து பொறுமை காத்து வரும் எடப்பாடி பழனிச்சாமி, இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை நிரந்தர பொதுச் செயலாளராக மாற்றும் வரை பொறுமை காக்க முடிவு எடுத்திருப்பதாகவும் தனது ஆதரவாளர்களையும் பொதுவெளியில் மிகக் கடுமையாக பேச வேண்டாம் என உத்தரவிட்டிருக்கிறார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெளிப்படையாக ஜெயக்குமாரால் போட்டு உடைக்கப்பட்டதிலிருந்து. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்தான் அதிமுக விவகாரம் மிக அதிகமாக பேசி வருகின்றனர்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதும் எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் கேபி முனுசாமி சி.வி சண்முகம் உள்ளிட்டோரை ஓ பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஒற்றை தலைமை
குறிப்பாக ஒற்றை தலைமை விவகாரம் அதிமுக அலுவலகத்தில் வெடித்ததில் இருந்தே செய்தியாளர் சந்திப்பு, சிறப்பு பேட்டிகள், ஆலோசனை என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பேசி வந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு நேர் எதிராக எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் வழக்கம்போல் அமைதியாகவே இருந்தார். பொதுக்குழு வரையிலேயே அவர் செய்தியாளர்கள் சந்திப்பை கூட தவிர்த்து வந்த நிலையில் ஆதரவாளர்கள் மூலமாக மட்டுமே தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.

எடப்பாடி அமைதி
அதேபோல பழனி, சேலம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் நேரடியாக ஓ.பன்னீர்செல்வத்தை பெயரைச் சொல்லி விமர்சிக்காமல் மறைமுகமாகவே விமர்சித்து வந்தார். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சில் திமுக எதிர்ப்பே பிரதானமாக இருந்தது. மேலும் சசிகலா டிடிவி தினகரன் குறித்து தற்போது வரை எந்தவிதமான கருத்துகளையும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறைமுக தாக்கு
இது குறித்த காரணத்தை சேலம் தரப்பு அதிமுக நிர்வாகிகளிடம் விசாரித்த போது பல சுவாரசிய தகவல்கள் கிடைத்தன. அதாவது ஓ.பன்னீர்செல்வத்தையோ சசிகலா டிடிவி தினகரனையோ நேரடியாக விமர்சிப்பது அதிமுக தொண்டர்களுக்கிடையே தன்னைப் பற்றிய எதிர்மறை எண்ணத்தை உருவாக்கும் எனவும் அதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக விமர்சிக்காமல் துரோகம் வஞ்சம் சூழ்ச்சி உள்ளிட்ட வார்த்தைகளை உபயோகித்து வருவதாகவும் இதனால் தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி மீது ஒரு சாப்ட் கார்னர் உருவாகி இருக்கிறது.

மாஜிக்களுக்கு உத்தரவு
மேலும் தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க தயாராகி வருகிறார். அதற்கு முன் தேவை இல்லாமல் விமர்சனங்களை ஏற்படுத்தி பின்னடைவை சந்திக்க வேண்டாம் என திட்டமிட்டு இருக்கும் அவர் பதவியேற்கும் வரை அமைதிக்காகவே விரும்புகிறார். அதே நேரத்தில் சிவி சண்முகம் கேபி முனுசாமி ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஓ பன்னீர்செல்வத்தை நேரடியாகவே விமர்சித்து வரும் நிலையில் அவர்களையும் சற்று அமைதியாக இருக்கும் படி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

இனிதான் அதிரடி
இதன் காரணமாகவே கடந்த ஒரு வாரமாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவ்வளவு ஆக எதிர் தரப்பை விமர்சிக்கவில்லை. அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் விமர்சனங்கள் மிகக் கடுமையாகவே முன்வைக்கப்படுகின்றன குறிப்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும் தற்போது ஓ பன்னீர்செல்வம் அணியில் இருப்பவருமான புகழேந்தி தொடர்ந்து காரசார விமர்சனங்களை வைத்து வருகிறார். ஓ பன்னீர்செல்வம் இதனையே பின்பற்றி வருவதாக கூறும் சேலம் நிர்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எடப்பாடியின் அதிரடி அரசியல் முடிவுகள் இருக்கும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications