வஞ்சிரமே..பாக்கெட்டை பதம் பார்க்கும் மீன்கள் விலை! தடைக்காலம் முடிந்தும் விலை அதிகரிக்க என்ன காரணம்?
சென்னை: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த போதிலும் வஞ்சிரம், விலைமீன், கொடுவா உள்ளிட்ட மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த போதிலும் மீன்கள் விலை அதிகரித்து காணப்படுவதற்கு என்ன காரணம் என்பது குறித்து மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை எண்ணூரில் தொடங்கி கன்னியாகுமரி வரை இருக்கும் வங்க கடலிலும், கன்னியாகுமரி மேற்கு பகுதியில் இருக்கும் அரபிக் கடலிலும் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரையில் சுமார் 8 மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். கட்டுமரம் ஃபைபர் படகுகள் சிறிய வகையிலான தோணிகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு பெரிய படகுகள் என பல்வேறு வகைகளில் மீன் பிடித்து தொழில் நடந்து வருகின்றனர்.
கடலில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு கரை வலை மற்றும் பத்து நாட்களுக்கு மேல் தங்கி இருக்கும் ஆழ்கடல் மீன்பிடிப்பு உள்ளிட்டவற்றில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பிடிக்கப்படும் மீன்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மீன்பிடி தடைக்காலம் வங்க கடலில் அமலில் இருந்தது.
பொதுவாக மீன்கள் கோடைகாலத்தில் இனப்பெருக்கம் செய்யும் நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்பு உள்ளிட்டவற்றால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். இதன் காரணமாக மீன்பிடி தடைக்காலம் நீண்ட காலமாகவே அமலில் இருக்கிறது. சுமார் 60 நாட்கள் மீன்பிடித்தடை காலத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். அப்போது படகுகளை சீரமைத்தல் புதிய வலைகள் பின்னுதல் மற்றும் ஏற்கனவே பழுதான வலைகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபடுபவர்கள்.
மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு அரசு சார்பில் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இதனிடையே ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேடு ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்கள் விற்பனை களைகட்டி காணப்பட்டது. அதே நேரத்தில் மீன்களின் விலையானது குறையாமலேயே இருந்தது.
வஞ்சிரம் மீன் 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையிலும், வவ்வால் மீன் ஆயிரம் ரூபாய் முதல் 1300 ரூபாய் வரையிலும், இறால் 500 ரூபாய்க்கும் விற்பனையானது. இதே போல சிறிய வகை மீன்களின் விலையும் 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையே இருந்தது. இதனால் மீன் பிரியர்கள் சற்று அதிருப்தி அடைந்தனர். அதே நேரத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த போதிலும் மீன்கள் விலை அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து மீனவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்திருக்கும் நிலையில் மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றிருக்கின்றனர். பொதுவாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும்போது திரும்பி வர 10 முதல் 15 நாட்கள் ஆகும். இதனால் பெரிய வகை மீன்களான வஞ்சிரம், கொடுவா, வவ்வால் உள்ளிட்ட மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது. கடலில் இருந்து குறைந்த தூரத்தில் இருந்து சென்ற மீனவர்கள் மட்டுமே சிறிய வகை மீன்கள் மற்றும் ஒரு சில பெரிய வகை மீன்களை குறைந்த அளவில் பிடித்து வந்தனர். இதனால் மீன்கள் விலையில் சற்றே ஏற்றம் இருந்தது.
அதே நேரத்தில் இன்னும் பத்து நாட்களில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்புவார்கள். அப்போது முதல் பெரிய வகை மீன்கள் விலை குறையும் என விளக்கம் அளித்துள்ளனர். இதனிடையே ஞாயிற்றுக்கிழமையான நேற்று குறைந்த விலையில் மீன்கள் கிடைக்கும் என ஆர்வத்துடன் சென்ற மின் பிரியர்கள் விலை அதிகரிப்பு காரணமாக குறைவான அளவில் மீன்களை வாங்கி சென்றனர். இனிவரும் நாட்களில் மீன்கள் விலை குறையும் நிலையில் விற்பனை அதிகரிக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.












Click it and Unblock the Notifications