தமிழ்நாடு ‘ஆல் ரவுண்ட் ஸ்டேட்’.. ஸ்டாலின் ஆசை சரி.... அடித்து சொல்லும் ஸ்போர்ட்ஸ் விமர்சகர்
சென்னை: 'களம் நமதே' மூலம் களத்தில் இறங்கி இருக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கார்பரேட் நிறுவனங்களின் நிதியை ஈர்ப்பதன் மூலம் விளையாட்டுத்துறையின் தலைநகரமாக்க தமிழ்நாட்டை மாற்றத் திட்டமிட்டிருக்கிறார்.
அதற்காகவே 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை' தொடங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் இலட்சினையை 'தல' தோனி அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். இந்த அறக்கட்டளைக்கு கார்ப்பரேட்டுகளிடம் இருந்தும் நிதி வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக விழாவை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சொந்த நிதியிலிருந்து ரூ 5 லட்சத்தை அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கார்பரேட்டுகளிடமிருந்து நிதி திரட்டும் இம்முயற்சி குறித்து விளையாட்டுத்துறை விமர்சகரும் பத்திரிகையாளருமான ரகுவிடம் பேசினோம்.
அவர், அமைச்சர் உதயநிதியின் 'சாம்பியன்ஸ் அறக்கட்டளை' குறித்த ஆக்கப்பூர்வமான பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

"விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதற்காக வேண்டியே, இந்த கார்பரேட் நிதியைத் திரட்டும் அறக்கட்டளையை ஆரம்பித்திருக்கிறது அரசு. இது நல்ல விஷயம். பொதுவாக அரசாங்கம் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கிறது.
ஆகவே விளையாட்டுத்துறைக்கு அரசினால் அதிக நிதியை ஒதுக்க முடிவதில்லை. எனவே விளையாட்டுத் துறைகளுக்காக ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளாகவே நிதியைச் செலவிட முடிகிறது. இதனால் விளையாட்டுத்துறை என்பது அதிகம் வளர முடியாமல் போய்விடுகிறது.
அதை மனதில் வைத்துத்தான் 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை'யை அமைச்சர் உதயநிதி முன்னெடுத்திருக்கிறார். இதன் மூலம் அரசு சாராத நிதியானது வீரர்களுக்குச் செலவிட முடியும். ஆக, இதுவே நமக்குக் கிடைக்கப்போன்ற முதல் நன்மை.
இன்னும் கூடுதலாக நிதி கிடைக்கும்போது விளையாட்டுத்துறை இயல்பாகவே உற்சாகம் பெறும்.
அடுத்து இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. அரசாங்கம் கார்பரேட் நிதியைத் திரட்டுவதில் எவ்வளவு அக்கறையோடு செயல்படுகிறதோ, அதே அளவுக்கு அந்த நிதியைச் செலவழிப்பதிலும் ஒரு குறிக்கோளை வைத்துச் செயல்பட வேண்டும்.
அதே போல் ஒரு வீரர் அல்லது வீராங்கனைக்கு அரசு நிதி அளிப்பது விஷயமல்ல; ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த வீரர்/ வீராங்கனைக்குத் தொடர்ந்து நிதியை இடைவெளி இல்லாமல் வழங்க வேண்டும். அப்போதுதான் ஒரு வீரர் சரியான இலக்கை அடைந்து, நமது மாநிலத்திற்கான கோப்பையை வென்று வருவார். இடையில் நிதி சரியாகச் சேரவில்லை என்றால், வீரரின் முயற்சிகள் பாதியிலேயே பலன் இல்லாமல் போய்விடும்.

ஆக, அரசு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் விளையாட்டுத்துறை விமர்சகர் ரகு.
நாம் அவரிடம், இந்த அறக்கட்டளை விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் அளித்திருக்கிறார். அப்போது அவர் கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் நிதியானது ஏதோ ஒரு விளையாட்டுக்கு மட்டுமே பயன்பெற்றுவிடாமல், அனைத்து விளையாட்டுகளும் சரியான அளவில் நிதி சென்று சேரவேண்டும். அதில் சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினோம்.
அதற்கு ரகு "அரசாங்கத்திற்கு அப்படி ஒரு கருத்து இருப்பது ஆரோக்கியமானதுதான். அதை நான் வரவேற்கிறேன். சமூகநீதி என்பது விளையாட்டிலும் இருக்க வேண்டும்தான். ஒரு விளையாட்டுத்துறை காதலனாக நானும் அதைத்தான் சொல்வேன்.
எனக்கு ஒலிம்பிக் பதக்கம் எல்லாம் தேவையில்லை. எல்லா குழந்தைகளும் பள்ளிப் பருவத்தில் மைதானத்தில் தினம் ஒரு மணிநேரம் விளையாட வேண்டும். அதுவே முக்கியம்.

முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வது சரியானதுதான். கொடுக்கின்ற நிதி அனைத்தும் கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே போய்ச் சேர்ந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு அவர் அதைக் குறிப்பிடுகிறார்.
அவர் தமிழ்நாடு 'ஆல் ரவுண்ட் ஸ்டேட்' ஆக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் சொல்கிறார். அவர் சொல்வதைப் போல விளையாட்டைப் பொறுத்தளவில் தமிழ்நாட்டிற்கு 'ஆல் ரவுண்ட் ஸ்டேட்' என்ற பெயர் எப்போதுமே உண்டு. பரவலாக நாம் பல விளையாட்டுகளில் பலமாகவே இருக்கிறோம்" என்கிறார்.
அவரிடம் தமிழ்நாடு அதிக பலமாக உள்ள விளையாட்டுகள் எவை என்று கேட்டோம். அவர், "தடகள விளையாட்டுகளில் நாம் மிகச் சிறப்பாக இருக்கிறோம். டீம் ஸ்போர்ட்ஸ் கூட நாம் நல்ல அளவில் உள்ளோம். வாலி பால், பேஸ்கட் பால் இவற்றில் கூட நாம் நன்றாகவே உள்ளோம்.
ஆனால், இவற்றில் நாம் ஒலிம்பிக்ஸ் வாங்கும் அளவுக்கு இல்லை. குழு விளையாட்டுகளில் நாம் சர்வதேச அளவுக்கு நாம் செல்லவேண்டும் என்றால் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டி உள்ளது" என்கிறார்
"நமது அரசின் நோக்கம் மாநில அளவிலான அனைத்து விளையாட்டுக்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதோடு மட்டும் இருந்துவிடக் கூடாது. எப்படியானாலும் இறுதியாக நமது இலக்கு பதக்கங்களை வெல்வதுதான்.
விளையாட்டுத்துறைக்கு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வந்துள்ளது பலவகையில் நல்லதுதான். இந்தத் துறை அதிக கவனம் பெறும். அதன் மூலம் நிதியும் பெருகும்.
ஏதேனும் ஒருவகையில் தனது துறை சாதிக்க வேண்டும் என்று அவரும் திட்டமிடுவார். எப்படிப் பார்த்தாலும் அனைத்து காரணிகளும் ஒரு நல்ல பலனையே தரும்" என்கிறார்












Click it and Unblock the Notifications