பழைய பாசம்.. மறக்காத ‘சேர்மன்’.. இணைவது உறுதி.. 'யார் தலைமை?’ - ரூட் போடும் டிடிவி தினகரன்!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தாலும், 'சேர்மன்' உடன் டிடிவி தினகரன் இணைந்து செயல்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அதிமுக மோதல் விவகாரத்தில் முன்பு பிடிகொடுக்காமல் பேசி வந்த டிடிவி தினகரன், தற்போது இணைந்து செயல்படலாம் என வெளிப்படையாகவே பேசத் துவங்கி விட்டார்.
விரைவில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்துப் பேசுவார் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.
1999ல் தொடங்கிய தினகரன் - ஓபிஎஸ் நட்பு சில ஆண்டுகள் முரணுக்குப் பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட இருக்கிறது. பழைய 'சேர்மன்' பாசத்தை புதுப்பிப்பதற்கான வேலைகளில் இரு தரப்புமே இறங்கியுள்ளது.

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் நட்பு
1996ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அந்த காலகட்டம் முதலே சசிகலா குடும்பத்தினருக்கும், டிடிவி தினகரனுக்கும் நெருக்கமானவர் ஆனார் ஓபிஎஸ். அப்போது நகர்மன்ற சேர்மனாக இருந்த ஓபிஎஸ்ஸை 'சேர்மன்' என அழைக்கத் தொடங்கிய தினகரன், ஓபிஎஸ் பின்னர் முதல்வரான பிறகும் கூட பழைய பாசத்தோடு 'சேர்மன்' என்று அழைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போதும், தினகரன் சேர்மன் என்று அழைப்பதையே ஓபிஎஸ் விரும்புகிறாராம்.

பெரியகுளம் + தினகரன்
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் நின்று வென்று எம்.பி ஆனவர் டிடிவி தினகரன். இதனால், 1999 முதல் இருவருக்கும் நெருக்கம் அதிகம். 2004 தேர்தலிலும் கூட பெரியகுளம் தொகுதியிலேயே போட்டியிட்டார் டிடிவி தினகரன். ஆனால், அந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதற்கிடையே 2001ல் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று சில காலம் முதல்வராகவும் இருந்தார் ஓபிஎஸ். இதனால், ஓபிஎஸ் - டிடிவி தினகரன் நட்பு வலுவானது.

அமமுக
எனினும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட சூழல்கள் இருவருக்கும் இடையேயான நட்பைத் துண்டித்தது. அதன்பிறகு அமமுக என தனிக்கட்சி தொடங்கிய தினகரன், தலா நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களைச் சந்தித்துள்ளார். அதில், குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் தென்மாவட்டங்களில் சில இடங்களை கைப்பற்றியது அமமுக.

வாய்ப்பே இல்லை
அதன்பிறகு, அதிமுகவில் கட்சியை இணைப்பீர்களா என தினகரனிடம் கேள்வியை முன்வைக்கும்போதெல்லாம், அதற்கு வாய்ப்பே இல்லை, நாங்கள் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறோம். மக்கள் எங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம். அதன்பிறகு, அதிமுக எந்த நிலையில் இருந்தாலும் மீட்டெடுப்போம் எனக் கூறி வந்தார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்
இந்நிலையில் தான் கடந்த ஜூன் மாதம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையேயான மோதல் போக்கு வலுவடைந்தது. இரு தரப்பும் கடுமையாக மோதிக்கொண்ட நிலையில், டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தோடு கைகோர்ப்பாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ்ஸும், சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கூட தெரிவித்தார். ஆனாலும், தினகரன், அதிமுகவில் இணையும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாகக் கூறி வந்தார்.

பாதை வேறு
அதிமுகவில் இருந்து விலகி தனிக்கட்சி நடத்துகிறோம். நாங்கள் வேறு பாதையை தேர்ந்தெடுத்து விட்டோம். இனி அதிமுகவில் இணைய வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஜனநாயகப் பாதையில் மக்களின் நம்பிக்கையைப் பெறவே உழைக்கிறோம். ஓபிஎஸ்ஸுக்கு நான் ஆதரவு கொடுக்க என்ன இருக்கிறது? மக்களின் நம்பிக்கையைப் பெற்று வென்ற பிறகு, எந்த நிலையில் இருந்தாலும், அதிமுகவை மீட்போம் எனத் தெரிவித்து வந்தார்.

மீண்டும் அழைப்பு
சமீபத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்த நிலையில், கசப்புகளை மறந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், இணைந்து செயல்பட்டு திமுகவை வீழ்த்துவோம் என எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். இதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்த நிலையில், டிடிவி தினகரன் வரவேற்றிருந்தார். அப்போதே டிடிவி தினகரனின் மாற்றம் கவனிக்கப்பட்டது.

ஓகே சொன்ன தினகரன்
இந்தநிலையில் ஓபிஎஸ் கருத்து பற்றி பதில் அளித்துள்ள டிடிவி தினகரன், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் கூறி வருகிறார். அது சரியான கருத்து. அவரவர் அவரவராக இணைந்து திமுக என்ற தீய சக்தியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றுவதற்கு எது சரியான வழியோ அதை செயல்படுத்துவோம். நேற்று வரை நடந்ததை மறந்து விட்டு எல்லாம் நல்லவைக்கே, நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். அவரவர் அவரவராக இருந்து செயல்பட வேண்டும் என்பதைத்தான் நான் அனைவருக்கும் கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

இணைந்து சந்திக்கலாம்
மேலும், "ஒரே கட்சியில் சேருங்கள் என ஓபிஎஸ் சொல்லவில்லை. யாரும் யாருடனும் இணைய வேண்டாம். அனைவரும் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும். தேர்தலில் ஒன்று சேர்ந்து சந்திக்கலாம். ஒரே வீட்டிலிருந்து பிரிந்து சென்றவர்கள், அவரவர் வீடுகளிலிருந்து பஞ்ச பாண்டவர்களாக இணைந்து துரியோதனன் கூட்டத்தை எதிர்த்து சண்டை போடலாம்.

யார் தலைமையில்?
கடந்த தேர்தலை ஒன்றாகச் சந்திப்பதற்காக நான் நட்புக் கரம் நீட்டினேன். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனாலேயே திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. அதிகம் பாதிக்கப்பட்ட நாங்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் பழையதையே நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று இணைந்து தேர்தலை சந்திக்கலாம். அந்தச் சமயத்தில் யார் தலைமையில் என்பது முடிவு செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார் தினகரன்.

ஈபிஎஸ் உடனும் விரோதம் இல்லை
இதோடு, ஈபிஎஸ் உடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடோ விரோதமோ எதுவும் கிடையாது எனப் பேசியிருந்தார் தினகரன். ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும் தம்பி எனக் குறிப்பிட்டு பாசமழை பொழிந்திருந்தார் டிடிவி. இதன்மூலம், அவர் மனம் மாறி, அதிமுகவோடு இணைந்து செயல்பட தயாராகியுள்ளது தெளிவாகிறது. எடப்பாடி பழனிசாமி மனம் கனிவாரா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

என்ன திட்டம்?
எடப்பாடி பழனிசாமி ஓகே சொன்னால், நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் ஆகியோர் பாஜக கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பார்கள். ஒருவேளை எடப்பாடி பழனிசாமி, இந்த முயற்சிகளை ஏற்காவிட்டாலும், ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்பட தினகரன் ரெடி ஆவார் என்று கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications