ஒரே வீடியோ ஓஹோன்னு வாழ்க்கை.. சப்ஸ்கிரைப் மூலம் சம்பாதிக்கும் பெண்கள்.. சிக்கினால் பெரிய தண்டனை
சென்னை: பொதுமக்கள் உணர்வுகளை தூண்டும் வகையில் உடல் பாகங்கள் தெரிய வீடியோக்களை சமூக வலைதளங்களில் அல்லது இணையதளங்களில் போட்டு, அதன் மூலம் சப்ஸ்கிரைப் செய்ய வைத்து சம்பாதித்தால் இந்தியாவில் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஆனால் இது தெரியாமல் சிலர் வேறுமாதிரி மாறி சம்பாதிக்கலாம் என நினைக்கிறார்கள்..சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது.. சட்டப்படி என்ன தண்டனை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைக்கு சிலர் சமூக வலைதளங்களில் சப்ஸ்கிரைப் செய்து பார்ப்போருக்கு, கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு சம்பாதிக்கிறார்கள்.இன்னும் சிலர் வீடியோ வெளியிட்டும் சம்பாதிக்கிறார்கள். ஒரே வீடியா ஓஹோன்னு வாழ்க்கை என்று சிலர் தவறான வழிக்கு செல்வதும் நடக்கிறது. ஆனால் பாலியல் ரீதியாக தூண்டும் வகையில் உடல் பாகங்கள் தெரியும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அல்லது இணையதளங்களில் வெளியிடுவது, அதன் மூலம் சப்ஸ்கிரைப் செய்ய வைத்து பணம் சம்பாதிப்பது என்பது இந்திய சட்டங்களின் கீழ் தண்டனைக்குரிய கடுமையான குற்றமாகும்.

இந்தியாவில் என்னென்ன தண்டனை என்பதை பார்ப்போம்
2000ம் ஆண்டு போடப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67ன்படி, மின்னணு வடிவத்தில் (வீடியோ, படம், எழுத்து) பாலியல் ரீதியான ஆபாசமான விஷயங்களை வெளியிடுவது அல்லது பரப்புவது குற்றம் ஆகும். இந்த குற்றத்திற்கு முதல் முறை 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் இரண்டாவது முறை அதே குற்றத்தைச் செய்தால், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67Aவின் படி, வெளிப்படையான பாலியல் செயல்கள் அல்லது ஆபாசமான வீடியோக்களை வெளியிடுவது, பரப்புவது அல்லது ஒளிபரப்புவது குற்றம் ஆகும். இதற்கு முதல் முறை 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67Bயின் படி, குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோக்கள் அல்லது படங்களை உருவாக்குவது, வெளியிடுவது, பரப்புவது அல்லது பார்ப்பது போன்ற செயல்கள் மிகக் கடுமையான குற்றம் ஆகும். இதற்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 292ன் படி, பாலியல் ரீதியாக ஆபாசமான புத்தகங்கள், வெளியீடுகள், படங்கள், ஓவியங்கள் அல்லது பிற பொருட்களை விற்பனை செய்வது, விநியோகிப்பது, பொதுவெளியில் காட்சிப்படுத்துவது போன்ற செயல்கள் குற்றமாகும். அதேபோல் பிரிவு 293 என்று 20 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆபாசமான பொருட்களை விற்பனை செய்வது அல்லது விநியோகிப்பது குற்றமாகும். மேலும் பிரிவு 294ன் படி பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது, பாடல்களைப் பாடுவது அல்லது சொற்களைப் பேசுவது குற்றம் ஆகும்.
அதேபோல் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்படியும் இது கடுமையான குற்றம் ஆகும்.
பிஎன்எஸ் பிரிவு 294ன்படி, ஆபாசமான புத்தகங்கள், வெளியீடுகள், படங்கள், ஓவியங்கள் அல்லது எந்தவொரு பொருளையும் (மின்னணு வடிவம் உட்பட) விற்பனை செய்வது, விநியோகிப்பது அல்லது பொதுவெளியில் காட்சிப்படுத்துவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. முதல் குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றத்தைச் செய்தால், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ₹10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
பிஎன்எஸ் பிரிவு 296ன் படி, பொது இடத்தில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது, ஆபாசமான பாடல்களைப் பாடுவது அல்லது சொற்களைப் பேசுவது போன்றவை தடை செய்யப்பட்டள்ளது. பொது இடங்களில் நேரடியாக செய்யப்படும் செயல்களுக்குப் பொருந்தும் என்றாலும், இணையத்தில் ஒரு வீடியோ மூலம் "பொது இடங்களில்" ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டால் இந்த பிரிவு பயன்படுத்தப்படும். இதற்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹1,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.எனவே சப்ஸ்கிரைப் செய்ய வைத்து சம்பாதித்தால் சட்டப்படி ஒரு திட்டமிட்ட குற்றமாகும். எனவே கண்டிப்பாக தண்டனை கடுமையாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications