இன்னும் அதே நினைப்பா.. டெல்லி மீட்டிங் முடிந்து சீனியர்களிடம் கவலைப்பட்டு பேசிய எடப்பாடி! என்னவாம்?
சென்னை : உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு ஹோட்டலுக்குச் சென்று தனது சகாக்களுடன் ஆலோசித்த எடப்பாடி பழனிசாமி ஒரு விஷயம் குறித்து வருத்தப்பட்டுப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி பாஜக தலைமை ஓபிஎஸ் பற்றி வைத்துள்ள அபிப்ராயம் தான் எடப்பாடியின் வருத்தத்திற்குக் காரணமாம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா இருவரையும் ஒன்றாகச் சந்தித்துப் பேசினார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதில் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பவர்கள். அவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று அமித் ஷா முன்பாக அமரவைத்தார் ஈபிஎஸ்.

முக்கியமான மீட்டிங் : இந்தச் சந்திப்பின்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, அதிமுகவில் பிளவு இருக்கக்கூடாது. அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம், திமுக கூட்டணியை எதிர்க்க நாம் ஒன்றாக நிற்க வேண்டும் என அமித் ஷா கூறியிருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என அமித் ஷா கூறியும் எடப்பாடி பழனிசாமி அதற்கு தடையாக இருந்தார்.
அதிமுக வலுவாகவே இருக்கிறது எனக் கூறி பாஜகவின் வேண்டுகோளை ஏற்க மறுத்தார். இப்போது அதிமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில், மீண்டும் அதே விஷயத்தை எடப்பாடி பழனிசாமியிடம் அறிவுறுத்தியுள்ளார் அமித் ஷா. அதாவது, ஓபிஎஸ்ஸை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இந்த மீட்டிங்கில் அமித் ஷா உணர்த்திய விஷயம். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதனை சூசகமாக மறுத்துள்ளார்.
அமித் ஷா அட்வைஸை சூசகமாக மறுத்த ஈபிஎஸ் : அவர்களிடம் தொண்டர்கள் பலம் இல்லை. கட்சியில் புறக்கணிக்கப்பட்ட சிலரைச் சேர்த்துக்கொண்டு கட்சியில் சிக்கலை ஏற்படுத்த நினைக்கின்றனர். அவர்கள் திமுகவுக்கு பி டீமாகவே செயல்படுகின்றனர். அவர்கள் அதிமுகவை விட்டு விலகிச் சென்றாலும் எந்த பாதிப்பும் வராது. அவர்களில் பல முக்கிய நிர்வாகிகளும் நம் பக்கம் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்று கட்சியில் சேர்த்து வருகிறோம். இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் பக்கம் ஆளே இருக்காது.

அவர்களை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை, அரசியல் ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை. அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தெளிவான உத்தரவைப் பிறப்பிக்க வழிவகை செய்ய வேண்டும். தேர்தல் நெருங்கும் சூழலில் தனக்கு நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் நல்லது எனக் கூறியுள்ளார் ஈபிஎஸ்.
ஹோட்டலில் ஆதரவாளர்களிடம் வருத்தம் : இந்த மீட்டிங் முடிந்த பிறகு ஹோட்டலுக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, தன்னுடன் மீட்டிங்கில் பங்கேற்ற முக்கிய தலைவர்களுடன் சிறிது நேரம் ஆலோசித்துள்ளார். அமித் ஷா உடனான சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர். அப்போது ஒரு விஷயத்தைக் கூறி, தனது சகாக்களிடம் வருத்தப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
நாம் கடந்த ஒரு ஆண்டு காலமாக சட்டப் போராட்டம் நடத்தி, தொண்டர்களின் ஆதரவோடு பொதுச் செயலாளர் பொறுப்புக்கு வந்திருக்கிறோம். ஆனால், அமித் ஷா இன்னும் அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனச் சொல்கிறாரே.. ஓபிஎஸ் அந்தளவுக்கு மேலிடத்தில் எண்ணத்தை விதைத்து வைத்திருக்கிறார். அவருக்கு களத்தில் ஆதரவே இல்லை என்று நாம் சொன்னால் கூட நம்ப மறுக்கிறார்கள் என வேதனையோடு பேசினாராம் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications