சென்னையில் பேருந்துகளை இயக்க மறுத்த ஓட்டுநர்கள்.. என்ன காரணம்.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகரில் இன்று திடீரென பேருந்து சேவை சுமார் 1.5 மணி நேரம் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் இப்போது மீண்டும் இயங்கும் நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் ஓட்டுநர்கள், நடத்துநர்களைப் புதிதாக வேலைக்கு எடுக்காததே காரணம் என சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே வலுவான பேருந்து உட்கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பேருந்து உட்கட்டமைப்பும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

இதனால் ஒவ்வொரு நாளும் பல லட்சம் பயணிகள் பேருந்துகளை நம்பியே இருக்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகள் நிரம்பி வழிவதே இதற்கான சாட்சி. மேலும், அரசு பேருந்துகளில் பெண்கள், மாணவர்களுக்கு இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகள் எப்போதும் இல்லாத வகையில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
கடும் பாதிப்பு:
இதற்கிடையே தலைநகர் சென்னை மற்றும் புறநகரில் இன்று மாலை 5 மணி தொடங்கிப் பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.. கேகே நகர், கோயம்பேடு எனப் பல இடங்களில் நீண்ட நேரமாகப் பேருந்துகள் பணிமனையில் இருந்து வெளியே வரவே இல்லை. தாம்பரம் உள்ளிட்ட சில இடங்களில் மிகக் குறைந்த அளவுக்கே பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பள்ளி, கல்லூரி, ஆபீஸ் முடிந்து மாலை வீடு திரும்பப் பொதுமக்கள் இருந்த நிலையில், திடீரென இப்படி பேருந்து சேவை பாதிக்கப்பட்டதால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்டது.
சிவசங்கர்:
இது குறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் கூறுகையில்,பொதுமக்கள் அவதிப்படக் கூடாது என்பதற்காகத் தான் ஜப்பானில் இருந்தாலும் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். நாங்களும் போக்குவரத்து சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். முதல்வர் வந்தவுடன் இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்.
விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும். சென்னை மற்றும் புறநகரில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் ஒப்பந்த ஓட்டுநர்களை வைக்கக் கூடாது என்பது அவர்களின் கோரிக்கை. நாம் பொதுமக்கள் சிரமத்தைப் போக்க நாம் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம். ஆனால், அது கூடாது என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். முதல்வர் ஜப்பானில் இருந்து வந்தவுடன் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
என் காரணம்:
கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் கூட புதிதாக எடுக்கவில்லை. இதுவே பிரச்சினைக்குக் காரணம். இப்போது தான் போக்குவரத்துக் கழகத்திற்கு வேலைக்கு ஆட்களை எடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். கும்பகோணம் பணிமனையில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பணிமனைகளிலும் நடவடிக்கை தொடங்கப்படும்.
இருப்பினும், இந்த பணிகள் முடிய 3,4 மாதங்கள் ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில் தேவையைப் போக்கத் தனியார் ஓட்டுநர்களைப் பயன்படுத்தலாம் என முடிவெடுத்தோம். அதற்குத் தான் இப்போது சிறு தடங்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை சமயத்தில் இது குறித்து நாங்கள் விளக்கி இருந்தோம். ஆனால், அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இது குறித்து அனைத்து தொழிற்சங்கத்துடன் பேசி உள்ளோம். மிக விரைவில் நிலைமை சரி செய்யப்படும்" என்றார்.
பேருந்து சேவை:
அதன்படி சற்று நேரத்திலேயே சென்னை மற்றும் புறநகரில் பேருந்து சேவை மெல்லத் தொடங்கப்பட்டது. பல பணிமனைகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவது ஆரம்பித்தது. அதன் பின்னரே பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இருப்பினும், சுமார் 1.5 மணி நேரம் பேருந்துகள் இயக்கப்படாததால் பல பேருந்துகளில் கூட்டம் நிரம்பியே வழிகிறது.












Click it and Unblock the Notifications