அண்ணா பல்கலை. பலாத்கார வழக்கு! ஞானசேகரனுக்கு எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை! முழு விவரம்!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை (anna university case details) வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி எனக் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கிடையே அவரது தண்டனை விவரங்கள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அவருக்கு எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை என்பது குறித்த விவரங்கள் இப்போது வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து பிப்ரவரி மாதம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

வன்கொடுமை வழக்கு
பின்னர் அந்த குற்றப்பத்திரிக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி விசாரித்தார். இந்த வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே இன்றைய தினம் ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டது.
ஆயுள் தண்டனை
அதன்படி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்.. மேலும், அவருக்குச் சிறையில் எந்தவொரு சலுகையும் காட்டக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை
அதன்படி வன்கொடுமை வழக்கில் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் தண்டனை குறைப்பு இல்லாமல் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், வன்கொடுமை வழக்கில் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிரக் கடுமையாகத் தாக்குதல் நடத்திய புகாரில் 7 ஆண்டுகள், பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்த குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலியல் ரீதியாகத் தாக்குதல் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, உடலில் காயத்தை ஏற்படுத்துதல் குற்றத்திற்கு ஒரு ஆண்டு, விருப்பத்திற்கு மாறாக அத்துமீறி நடத்தல் குற்றத்திற்கு 3 மாதங்கள், சட்ட விரோதமாகத் தடுத்து நிறுத்துதல் குற்றத்திற்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொலை மிரட்டல் விடுத்தல் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.90,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 பிரிவுகளில் தண்டனை
ஞானசேகரன் மீது மொத்தம் 12 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் 11 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தனித்தனியாகத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் நமது நாட்டின் சட்டப்படி ஒருவர் தனித்தனியாக ஒவ்வொரு குற்றத்திற்கும் சிறையில் இருக்கத் தேவையில்லை. இதனால் ஒட்டுமொத்தமாக அவர் 30 ஆண்டுகள் சிறையில் இருந்தால் போதும். அதேநேரம் அவருக்குச் சிறையில் எந்த சலுகைகளும் காட்டக் கூடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications