முதல்வராகும் விஜய்.. என்ன மாதிரியான பாதுகாப்புகள் வழங்கப்படும்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில் விரைவில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் முதல்வர் ஆனால் அவருக்கு என்ன மாதிரியான பாதுகாப்புகள் வழங்கப்படும் என்பது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த விஜய் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என சொல்லி அதற்கு ஏற்ப பணிகளை செய்து வந்தார். 233 தொகுதிகளில் தனித்து களம் இறங்கிய விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றார். கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது தவெக. விஜய் முதல்வர் ஆகும் பட்சத்தில் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள் குறித்து பார்க்கலாம்.

என்னென்ன பாதுகாப்புகள் வழங்கப்படும்
விஜய்யை பொறுத்தவரை அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உள்ளது. விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் பலத்த பாதுகாப்பு போட வேண்டிய நிலையே உள்ளது. பிரசாரத்தின் போதே அவருக்கு பாதுகாப்பு அதிக அளவில் இருந்தது. இனி முதல் அமைச்சராக பொறுப்பேற்றால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.
தேசிய பாதுகாப்பு படை கமோண்டாக்கள் மற்றும் தமிழக போலீசார் இணைந்து பாதுகாப்பு அளிப்பார்கள். விஜய் செல்லும் இடங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கூட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். வீடு மற்றும் அலுவலகங்கள் பயணப்பாதை என விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் பல அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.
24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார்
அதிரடி அவசர மாற்று திட்டங்கள், ரகசிய உளவு கண்காணிப்பு, அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிவது போன்ற பாதுகாப்பு போடப்படும். 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் வீடு மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பில் இருப்பார்கள். விஜய் பயன்படுத்தும் வாகனங்கள் குண்டு துளைக்காத வாகனங்களாக இருக்கும்.
அவரது வாகனத்திற்கு முன்னும் பின்னும் அதிரடிப்படை போலீசார் வாகனம் செல்லும். முதல்வரின் வாகனம் செல்லும் போது மின்சாதனங்களை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவி பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றும் உடன் செல்லும். ஏதேனும் உடல்நலப்பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவக் குழுவும் கூடவே செல்லும்.
என்னென்ன சலுகைகள்
முதல்வர் பொது இடங்களுக்கு சென்றால் அந்த இடங்கள் முன்கூட்டியே சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். சலுகைகள் என்று பார்த்தால் முதல்வருக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் அரசு பங்களா ஒதுக்கப்படும். இந்த வீட்டுக்கு எந்த வாடகையும் விஜய் செலுத்த வேண்டியதில்லை. வீட்டின் பராமரிப்பு, மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்.
ஆனால் விஜய் இந்த வீட்டை பயன்படுத்த வேண்டும் என்ற கட்யாயம் இல்லை. ஏனெனில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான வீடுகளிலேயே வசித்தனர். அங்கிருந்தபடியே தினமும் தலைமை செயலகம் செல்வது அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர். எனவே, விஜய் நீலாங்கரை வீட்டிலேயே இருக்கலாம் என்றே தெரிகிறது.














Click it and Unblock the Notifications