எந்த மாவட்டத்திற்கு ஜாக்பாட்.. எங்கு மழை குறைவு? வடகிழக்கு பருவமழை.. வெதர்மேன் விரிவான ரிப்போர்ட்
சென்னை: வடகிழக்கு பருவமழை இப்போது தான் நிறைவடைந்துள்ளது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஓரளவுக்குச் சிறப்பாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் விரிவான பதிவை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கும்.. வடகிழக்கு பருவமழை காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களுக்கும் மழை பெய்யும்.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் ஓரளவுக்கு நல்ல மழை கிடைத்தது. இந்தச் சூழலில் கடந்த கடந்த அக். மாதம் இறுதியில் மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

தமிழ்நாடு வெதர்மேன்
இதனிடையே இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் மவை எப்படி இருந்தது என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது கலவையான பருவமழையாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும், இயல்பை விட 1% அதிக மழை கிடைத்தாக தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் தனது பிளாகில் விரிவாக எழுதியுள்ளார். அதில் "பருவமழை போது 4 முதல் 5 நேரங்களில் நல்ல மழை பெய்தது. அக்டோபர் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சிறப்பாக இருந்தது. பருவமழை தாமதம் தொடங்கினாலும், உள்மாவட்டங்களில் நல்ல மழை இருந்தது" என்று கூறி டேட்டா சார்ட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

சென்னை பெல்ட்
அவர் மேலும் கூறுகையில், "நவம்பர் முதல் வாரத்தில் இருந்து இந்த பருவமழையின் பெரும்பாலான குறைந்த காற்றழுத்தம் மேற்கு - வடமேற்கு பகுதியில் தான் இருந்தது. கிறிஸ்துமஸ் சமயத்தில் உருவான காற்றழுத்தம் மட்டும் தெற்கே ஏற்பட்டது. வட தமிழகம் (சென்னை பெல்ட்), வட உள் தமிழகம் (கிருஷ்ணகிரி பெல்ட்) அனைத்திலும் நல்ல பருவமழை இருந்தது.. அதே நேரத்தில் தெற்கு மற்றும் டெல்டா பெல்ட் பகுதிகளில் பெரும்பாலும் எதிர்பார்த்த மழை இல்லை. மண்டல வாரியாக எங்கு எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதைப் பார்க்கலாம்.

நல்ல மழை
KTCC மாவட்டங்களில் (சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள்) 3வது ஆண்டாக நல்ல பருவமழை பெய்தது.. குறிப்பாகக் காஞ்சிபுரத்தில் 35% அதிக மழை (801 மிமீ) பெய்தது. சென்னை மாவட்டத்தில் இயல்பைக் காட்டிலும் 14% அதிகமாக (925 மிமீ) மழை பெய்துள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மழை சற்று குறைந்து இருந்தது. இருப்பினும், ரொம்ப மோசம் இல்லை. ராணிப்பேட்டையில் வேற லெவல் மழை இருந்தது.

மேற்கு தமிழகம்
ஈரோடு மாவட்டத்தில் மிகச் சிறப்பாக மழை இருந்தது. வடகிழக்கு பருவமழை இயல்வை விட 58% அதிகமாக இருந்தது.. பொதுவாகக் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பெல்ட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மிகக் குறைந்த மழை பெய்யும்.. ஆனால் இந்தாண்டு கிருஷ்ணகிரியில் 37% அதிகமாக மழை பெய்தது. கோவையிலும் 38% கூடுதல் மழை கிடைத்தது. நீலகிரியில் மட்டும் 13% குறைவாக மழை பெய்தது.

தென் தமிழக மாவட்டங்கள்
மதுரை கடந்த 3-4 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வந்தது. இந்தாண்டு இயல்பை விட 18% அதிகமாக மதுரையில் மழை பெய்துள்ளது.. விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் நல்ல மழை பெய்துள்ளது. சிவகங்கையில் இயல்பை விட சற்று குறைவாகவும், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி என மற்ற மாவட்டங்களிலும் இயல்பை விடக் குறைவாகவே மழை பெய்துள்ளது. வைகை, பெரியாறு அணைகளில் நல்ல தண்ணீர் இருப்பு உள்ளதால் அதைச் சார்ந்துள்ள மாவட்டங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் 55% நீர் இருப்பு உள்ளது. இது மிகவும் மோசமாக இல்லை.. அதேநேரம் திருப்திகரமானதும் இல்லை.

டெல்டா மற்றும் மாவட்டங்களில்
மயிலாடுதுறை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களும் மிகக் குறைந்த மழையே பெய்துள்ளது. ஆனால் மேட்டூரில் அணையின் நீர்மட்டம் 120 அடியை நெருங்கியுள்ளதால் டெல்டா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை. உள்மாவட்டங்களில். குறிப்பாக வடக்கு உள் பகுதிகளுக்குச் சிறப்பான ஒரு வடகிழக்கு பருவமழை சீசன் கிடைத்துள்ளது. வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளும் வகையிலான மழை கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக
அனைத்து காற்றழுத்தங்களும் வடக்கு தமிழக உட்பகுதிகளை நோக்கி நகர்ந்தன.. இதனால் அங்கு அற்புதமான மழை பெய்தன. திருச்சியில் மட்டும் விதிவிலக்கு. ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால் 21 மாவட்டங்களில் நல்ல மழையும்.. 17 மாவட்டங்களில் குறைவான மழையும் பெய்துள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழை இயல்பை விட 1% அதிகமாகப் பெய்து சாதகமாகவே முடிந்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications