இந்த நம்பரை நோட் பண்ணுங்க.. மழையில் மின்வயர் அறுந்தால் என்ன செய்ய வேண்டும்? மின்வாரியம் ‛அட்வைஸ்’
சென்னை: தமிழ்நாட்டில் சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்தால் மின்வயர்கள் அறுந்து விழ வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் மின்வயர் அறுந்து விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பாக மின்வாரியம் முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளதோடு, புகார் எண்ணையும் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்க்கிறது. இந்த கோடை மழை வரும் 20ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதோடு தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் மே 20ம் தேதி சில இடங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழையை எதிர்கொள்ள வேண்டிய பணிகள் தொடங்கி உள்ளன. நீலகிரி, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் என்றால் மழை மட்டுமின்றி சூறைக்காற்றும் வீச வாய்ப்புள்ளது. இதனால் மின்வாரிய பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இத்தகைய சூழலில் தான் கோடை மழையில் மின்வயர் அறுந்து விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சார்பில் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பொதுமக்களுக்கான முக்கிய அட்வைஸை வழங்கி உள்ளது.
அதில், ‛‛கோடைகால மழை நேரங்களில் பலத்த காற்று மற்றும் பலத்த மழையின் காரணமாக மின் கம்பங்கள் அருகில் யாரும் செல்ல வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை யாரும் தொடாதீர்கள். உடனே மின்வாரியத்திற்கு 9498794987 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications