2006-இல் முரசு கொட்டிய விருத்தாசலத்தில் டெபாசிட் இழந்தார் பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை: விருத்தாசலம் சட்டசபைத் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைந்தார்.
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளே கிட்டதட்ட அரை நூற்றாண்டாக மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இதற்கு மாற்றாக தேமுதிக எனும் கட்சியை விஜயகாந்த் தொடங்கினார்.
தொடங்கிய மாத்திரத்திலேயே விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 234 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்ட போதிலும் விஜயகாந்த் மட்டுமே வென்றிருந்தாலும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

அந்தஸ்து
இதையடுத்து 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த நிலையில் திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் பெற்றார். இதன் பின்னர் தேமுதிக பெரும் சறுக்கல்களையே சந்தித்து வந்தது.

பிரேமலதா
சட்டசபைத் தேர்தலில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதாவிடம் நாக்கை துருத்தி பேசியவர் விஜயகாந்த் என்ற ஒரு பார்வை இருந்து வரும் நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் அதிமுகவுடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கும் நிலையை பிரேமலதா ஏற்படுத்திவிட்டதாகவே கட்சியினர் கருதினார்கள்.

போயஸ் தோட்டம்
நேற்று தொடங்கிய சிறிய கட்சிகள் கூட தனித்து போட்டியிடும் நிலையில் இந்த சட்டசபை தேர்தலிலும் அதிமுக எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்தது தேமுதிக. 2011 ஆம் ஆண்டு விஜயகாந்த் வருகைக்காக தனது சுற்றுப்பயணத்தையே ஜெயலலிதா ரத்து செய்துவிட்டு போயஸ் தோட்டத்தில் காத்திருந்தார் என செய்திகள் சொல்கின்றன.

அதிமுக
அப்படிப்பட்ட கேப்டனின் கட்சி அதிமுகவுக்காக காத்திருக்கும் நிலையா என தொண்டர்கள் விம்மினார்கள். இதையடுத்து உரிய தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியே வந்தது. பின்னர் தனித்து போட்டியிடும் என எதிர்பார்த்த நிலையில் அமமுகவுடன் கூட்டணி அமைத்தது.

தோல்வி
அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 60 தொகுதிகளில் விருத்தாசலத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா போட்டியிட்டார். காலையிலிருந்தே பின்னடைவை சந்தித்து வந்த பிரேலமதா அனைத்து சுற்று வாக்குகள் முடிவில் படுதோல்வி அடைந்தார். டெபாசிட்டையும் இழந்தார். இந்த லேடி கேப்டனும் வெல்வார் என பிரேமலதா சவால் விடுத்த நிலையில் தற்போது அவரது தோல்வியால் தொண்டர்கள் கவலையடைந்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications