"டெம்ப்ளேட்" ஒன்னுதான்.. ரஜினிக்கு போட்டது.. அப்படியே சசிகலாவுக்கு மாத்தி விட்டு.. பலே பாஜக!
சசிகலா அதிமுகவில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: சசிகலாவின் விடுதலையானது, அரசியல் களத்தில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. உண்மையிலேயே சசிகலாவின் வருகை யாருக்கு நன்மை பயக்கும்? அவர் யாரை தூக்கி விட போகிறார்? யாரை கதற விட போகிறார் என்ற எதிர்பார்ப்பும் கூடி வருகிறது.
சசிகலா விரைவில் விடுதலையாகி வெளியே வர போகிறார்.. அவர் வருவதற்கு முன்பேயே அரசியல் களம் தகித்து கிடக்கிறது.. விவாதங்கள் சூடுபிடித்து வருகின்றன.. கணிப்புகள் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.
அப்படி சசிகலா ரிலீஸ் ஆகி வெளியே வந்தால் என்ன நடக்கும்? தமிழக அரசியலில் மாற்றங்கள், அதிர்வுகள் ஏதேனும் நிகழுமா? சசிகலா வருகைக்கும், பாஜகவுக்கும் நேரடியான தொடர்புகள் இருக்கிறதா? அப்படி இருக்கும்பட்சத்தில் அது எந்த வகையில் அதிமுகவுக்கு பலம், பலவீனத்தை தரும் என்பன போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.. இந்த சந்தேகங்கள் அனைத்தையும் சில அரசியல் நோக்கர்களிடமும் விவாதித்தோம்.. அவர்கள் அனுமானத்தில் தெரிவித்த தகவல்கள்தான் இவை:
சசிகலா
"சசிகலாவை பாஜகவால் தவிர்க்க முடியாத நிலைமை உருவாகி உள்ளது.. இதற்கு காரணம் அதிமுக இந்த 4, 5 வருடமாகவே பல்வேறு அதிருப்திகளை சந்தித்து கொண்டிருக்கிறது.. எடப்பாடியாரை பொறுத்தவரை 2500 ரூபாய் பொங்கல் பரிசு என்பது மக்களிடம் செல்வாக்கை தந்துள்ளது.. அதை மறுக்கவே முடியாது.. இன்னும் ஒருசில திட்டங்களை அவர் முன்னெடுத்ததை பாராட்டியே ஆக வேண்டும்.. ஆனால், அவை எல்லாம் தேர்தல் வரை தாக்கு பிடிக்குமா என்பதுதான் சந்தேகம்.
எதிர்ப்புகள்
அதுமட்டுமல்ல, வரவேற்பை விட, எதிர்ப்புகளே ஆளும் தரப்புக்கு அதிகமாகி உள்ளது. ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்றதுமே, அதிமுக மீது சவாரி செய்துதான், கால் ஊன்ற வேண்டிய நிலைமையில் பாஜக இருக்கிறது.. அப்படியே அதிமுக துணையுடன் போட்டியிட்டாலும், திமுகவுக்கு டஃப் தர வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.. ஒருவேளை சசிகலா வெளியே வந்து, அதிமுகவுடன் இணைய சம்மதம் தரவில்லையானால், ஒட்டுமொத்த கூட்டணிக்கே பாதிப்பு வந்துவிடும்.. அதனால், பெருவாரியான இடங்களில் அதிமுகவே வெற்றி பெற வேண்டும் என்பதாலேயே சசிகலாவை பயன்படுத்தவும் பாஜக முயன்று வருவதாக தெரிகிறது.
தென்மாவட்டம்
உதாரணத்துக்கு, தென்மாவட்டங்களில் அதாவது மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்திவிட்டால், போன்ற மாவட்டங்களில் அதிமுக தன் வெற்றிவாய்ப்பை இழந்துவிட வேண்டியதுதான் என்பதையும் பாஜக நன்றாகவே உணர்ந்திருக்கிறது.. ஏற்கனவே திமுக அங்கு வலுவாகி கொண்டு வருவதையும் மறுக்க முடியாது.. அதனால், சசிகலாவை இணைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது.
சசிகலா
அதனால், 2 வகைகளில் காய் நகர்த்தக்கூடும்.. ஒன்று எடப்பாடி - சசிகலாவை இணைத்து தேர்தலை சந்திப்பது, அல்லது அதற்கு எடப்பாடி தரப்பு ஒத்து வரவில்லையானால் இரட்டை இலை சின்னத்தை முடக்கிவிட்டு, கட்சியில் பிளவுபடுத்தி தேர்தலை சந்திப்பது என்ற 2 வழிகளில் காய் நகர்த்தக்கூடும்.. முதல்கட்டமாக, அனைவரையும் சேர்த்து அணைத்து சென்று தேர்தலை சந்திப்பதுதான் பலம் என்றும், அதன்மூலம் தங்கள் கட்சி சார்பில் எம்எல்ஏக்கள் உருவாகலாம் என்றும் கணக்கு போடுகிறது..
குருமூர்த்தி
இந்த விஷயத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று தெரியவில்லை.. ஒருவேளை, சசிகலாவை கட்சிக்குள் சேர்க்கவில்லை என்றால், குருமூர்த்தி சொன்னபோதே கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்குமே.. ஆனால் ஜெயக்குமாரின் மறுப்பானது, ஒப்புக்கு தான் மேலோட்டமாக இருந்ததே தவிர, கடுமையான வார்த்தைகளால் கண்டனம் சொல்லவில்லை.. அவ்வளவு ஏன், ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சுக்கும், கோகுல இந்திராவின் புகழ்ச்சி பேச்சுக்கும் இந்நேரம் எடப்பாடியார் தரப்பே நேரடியாகவே நடவடிக்கை எடுத்திருக்கலாமே.. ஏன் செய்யவில்லை?
சமாளிப்பு
அதேபோல, நாங்கள் அதிமுகவுடன் சேர மாட்டோம் என்று டிடிவி தினகரன் ஏன் இப்போது வரை சொல்லாமல் இருக்கிறார்? இந்த விஷயத்தைதான் நாம் கவனிக்க வேண்டி உள்ளது.. பாஜகவை அனுசரிக்க வேண்டிய தேவையும், திமுகவை சமாளிக்க வேண்டிய கட்டாயமும் அதிமுகவுக்கும் உள்ளது.. அதனாலேயே சசிகலாவின் இணைப்பை அதிமுக ஏற்கும் என்றே தெரிகிறது... சுருக்கமாக சொல்லப்போனால் ரஜினிக்கு பதிலாக ரூட்டை சசிகலா பக்கம் திருப்பி விட்டுள்ளது பாஜக.. இப்படிப்பட்ட சூழலில் முதல்வரும் டெல்லி சென்றுள்ளதால், நிச்சயம் சாதகமான சூழல்களே நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது" என்றனர்.