முஸ்லீம் ஓட்டு போதுமா.. பிராமணர்கள் ஓட்டு வேணாமா?.. திமுகவுக்கு "விட்டு தர்ற" மாதிரி ஆகி போச்சே!
சேப்பாக்கம் தொகுதியை பாமகவுக்கு ஏன் அதிமுக ஒதுக்கியது என தெரியவில்லை
சென்னை: முஸ்லீம்கள் ஓட்டு மட்டும் போதுமா.. பிராமணர்கள் ஓட்டு வேணாமா? அய்யங்கார் பிரிவு வாக்கு வேணாமா? இதையெல்லாம் பார்த்துதானே வேட்பாளரை நிறுத்தணும்? என்ற முணுமுணுப்புகள் எழ தொடங்கி உள்ளன.. முணுமுணுக்கப்படுவது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை பற்றிதான்..!
நேற்று அதிமுக கூட்டணி சார்பில் தொகுதி பட்டியல் வெளியானது.. அதில் மற்ற தொகுதிகளைவிட அதிகம் ஷாக் தந்த தொகுதி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணிதான்.
இந்த தொகுதியை பாஜக கேட்டுக் கொண்டிருந்தது.. குஷ்புவை அங்கு போட்டியிட முடிவு செய்து, இதற்காக பல மாதங்களுக்கு முன்னரே குஷ்புவை அங்கு பொறுப்பாளராகவும் அறிவித்தது. தேர்தல் தேதி வந்தபிறகு, இதே சேப்பாக்கம் தொகுதியில் பணிமனை ஒன்றை குஷ்பு உருவாக்கினார்.

பணிமனை
கண்டெய்னர்கள் கொண்டு பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பணிமனை பின்னர் வேட்பாளரின் பணிமனையாக மாறும் என்று பேசப்பட்டது. அப்படிப்பட்ட சூழலில், இந்த சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாமகவுக்கு என்று அறிவித்து அதிமுக தரப்பில் தொகுதி பட்டியல் வெளியானது. இது குஷ்பு உட்பட பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஷ்புவை இந்த தொகுதியில் நிறுத்தினால், முஸ்லிம் ஓட்டுக்களை அசால்ட்டாக பெற்றுவிடுவார் என்பதுடன் உதயநிதியையும் எளிதாகவே தோற்கடித்துவிடுவார் என்று பாஜக தரப்பு நம்பியது.

தொகுதி
ஆனால், பாமகவுக்கு இந்த தொகுதி சென்றுள்ளது.. வடமாவட்ட செல்வாக்கு பெற்ற பாமக, சேப்பாக்கத்தில் என்ன செய்ய போகிறது? எப்படி வென்று வர போகிறது என்பது வேறு விஷயம்.. ஆனால், வெறும் இஸ்லாமிய வாக்குகளை மட்டுமே வைத்து சேப்பாக்கத்தை முடிவு செய்வதா? மற்ற இனத்தவரின் ஓட்டுக்களும் அங்கே இருக்கிறதல்லவா? என்ற விவாதங்களும் எழுகின்றன.

முஸ்லிம்கள்
சேப்பாக்கத்தை பொறுத்தவரை தமிழகத்தின் மிக சிறிய சட்டப்பேரவை தொகுதியாகும்.. இங்கு சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.. இன்னும் சொல்லப்போனால், எந்த தேர்தல் வந்தாலும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகவும் இவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை... ஆனால் அதேசமயம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் வெல்ல முஸ்லீம் ஓட்டுக்கள் மட்டும் போதாது... அங்கு பிராமண சமுதாயத்தினர் வாக்குகள் அதிகம். குறிப்பாக அய்யங்கார் பிரிவு வாக்குகளும் முக்கியமானது.. இந்த 2 வாக்குகளையும் பெறுபவர்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற கணக்கும் உள்ளது.

பாமக
இந்தத் தொகுதியில் நிச்சயம் பாமக வெல்வது கடினமே... காரணம் பாமகவுக்கு இங்கு எந்தவிதமான பலமும் கிடையாது. இந்த தொகுதியை எதற்காக பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியது என்ற காரணமே இன்னும் நமக்கு பிடிபடவில்லை.. வேண்டுமானால், அதிமுக தானே நேரடியாக போட்டியிட்டு முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தியிருக்கலாம்.. அல்லது பாஜகவிடமே கொடுத்திருக்கலாம்... அப்படி தந்திருந்தால், குஷ்பு நிச்சயம் வென்றிருப்பார்.. அல்லது திமுகவுக்கு டஃப் தந்திருப்பார்.

உதயநிதி ஸ்டாலின்
ஆனால் இதில் எதுவுமே செய்யாமல் ரெண்டாங்கெட்டானாக பாமகவிடம் கொடுத்த காரணம் என்ன என்று புரியவில்லை... ஒருவேளை உதயநிதி ஸ்டாலின் போட்டியிடலாம் என்பதால் நட்பு ரீதியாக இந்தத் தொகுதியை பாமகவிடம் விட்டுக் கொடுத்து விட்டதா அதிமுக என்ற கேள்வியும் எழுகிறது.

நெருக்கடி
வழக்கமாக தமிழகத்தில் முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும்போது எதிர்த்து வலுவான தலைவர்களை நிறுத்த மாட்டார்கள். கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் என பல தலைவர்களுக்கு எதிராக அதிமுக வலுவான வேட்பாளர்களை நிறுத்தாது. அதேபோல திமுகவும் ஜெயலலிதா உள்ளிட்டோரை எதிர்த்து வலுவான வேட்பாளர்களை நிறுத்தாது... ஒருவேளை தொகுதியை பாஜகவிடம் கொடுத்தால் குஷ்புவை நிறுத்தி உதயநிதிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்பதால்தான் தொகுதியை பாஜகவிடம் கொடுக்காமல், தானும் போட்டியிடாமல் பாமகவிடம் கொடுத்து விட்டதோ அதிமுக.. என்ற ஒரு செய்தியும் படுவேகமாக ரவுண்டு கட்டி வருகிறது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications