ஆயிரமாயிரம் மனித உயிர்களை வாரி சுருட்டிய சுனாமி-19 ஆண்டுகளாகியும் பாடம் கற்காத 'இந்திய வானிலை' மையம்
சென்னை: 19 ஆண்டுகளுக்கு முன்னர் 2004-ம் ஆண்டு இந்திய பெருங்கடல் சுனாமி லட்சக்கணக்கான மனித உயிர்களை அப்படியே காவு கொண்டது. 21-ம் நூற்றாண்டின் பெருந்துயரம் 2004-ம் ஆண்டு ஆழிப்பேரலை எனும் சுனாமி.
2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் சுனாமி பேரலைகளை ஏற்படுத்தியது. அந்தமான் தீவுகளிலும் இத்தகைய சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி பேரலைகளை உருவாக்கியது.

சுனாமி பேரலைகள் எனும் ஆழிப் பேரலைகள் அந்தமான் தீவுகளை நிர்மூலமாக்கி அப்படியே தமிழ்நாட்டைத் தாக்கியது. முன்னெப்போதும் எதிர்கொண்டிராத இந்த சுனாமி பேரலைகள் தமிழ்நாட்டின் அத்தனை கடலோர பரப்புகளையும் தாக்கி ருத்ரதாண்டவமாடியது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை பதிவான 'சுனாமி' மரணங்கள் எண்ணிக்கை 8,000. காணாமல் போன, கடல் கொண்ட உயிர்கள் எத்தனை எத்தனையோ!
சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினம்: இன்று சுனாமி 19-ம் ஆண்டு நினைவு தினம். இந்த சுனாமி ஆழிப் பேரலை தினம் பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை. இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி பேரலை அந்தமானில் ருத்ரதாண்டவமாடிய சுனாமி பேரலை, இந்தியாவை நோக்கி வருகிறது; இந்தியாவை தமிழ்நாட்டை அழிக்கப் போகிறது என்கிற முன்னெச்சரிக்கை விடுவிக்கப்படவில்லை? இதையெல்லாம் கணிக்கக் கூடிய வல்லமையற்றதாகவா 'இந்திய வானிலை' மையம் இருந்தது? இதை எல்லாம் எதிர்கொள்ளக் கூடிய திராணியற்றதாகவா 'நமது அரசு கட்டமைப்பு' இருந்தது? என்பதுதான் முதன்மையான கேள்வி.
சாமானியன் கேள்விகள்: அண்மையில் தென் மாவட்டங்களில் பெருமழை கொட்டி பேரழிவை ஏற்படுத்தியது. ஒரு ஆண்டில் பெய்யக் கூடிய மழை, ஒரே நாளில் மேகவெடிப்புக்கு இணையாக கொட்டித் தீர்த்து காயல்பட்டினத்தை மூழ்கடித்தது. ஆனால் வானிலை ஆய்வு மையமோ நாங்கள் 21 செமீக்கு அதிகமான மழை பெய்யும் என்றுதானே முன்னெச்சரிக்கை விடுத்தோம்; எங்களை காயப்படுத்தாதீர்கள் என விளக்கம் தருகிறது. வழக்கத்தை விட 3 மடங்கு அல்லது 4 மடங்கு பெருமழை பெய்யப் போகிறது என்று சொல்லக் கூடவா நம்மிடம் வானிலை கட்டமைப்பு இல்லை என்பதுதான் சாமானியனின் கேள்வி.
பாடம் கற்க வேண்டும்: இன்று வானிலை மையத்தின் செயல்பாடுகள் நாடு தழுவிய அளவில் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அன்று சுனாமி பேரலையில் சிக்கிய உயிர்களை தேடி தேடி ஓய்ந்து போன நாம் 'வானிலை மையம்' என்னதான் செய்து கொண்டிருந்தது என ஆணித்தரமாக விவாதிக்காமல் போய்விட்டோம். அன்று விவாதித்திருந்தால் அன்று விமர்சித்திருந்தால் இன்றும் மீண்டும் மீண்டும் பேரழிவுகளை எதிர்கொள்ளமாட்டோம் அல்லவா? அந்தமானை நெருங்கிவிட்ட சுனாமி பேரலை, அந்தமானில் நின்று பேயாட்டம் போட்ட சுனாமி பேரலை இதோ உங்களை தாக்கப் போகிறது என ஒட்டுமொத்த இந்தியாவை எச்சரிக்க முடியாத வானிலை முன்னெச்சரிக்கை மையங்கள், இப்போதைய தென் மாவட்ட பேரழிவுக்கு பின்னராவது பாடம் கற்க வேண்டுமே தவிர காலத்துக்கு உதவாத லாவணி கச்சேரிகளைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் வேண்டுகோள். அதுதான் இன்றைய தென் மாவட்ட பெருவெள்ளமும் நமக்கு கற்றுத் தருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications