சென்னையில் ரூ.6000 வெள்ள நிவாரணம் விடுபட்டவர்களுக்கு எப்போது? ராதாகிருஷ்ணன் குட்நியூஸ்
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இதுவரை நிவாரணத்தொகை கிடைக்காதவர்களுக்கு விரைவில் ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தபால் துறையினருக்கான அகில இந்திய ஆக்கி போட்டியினை சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் கூறுகையில், சென்னையில் உள்ள விளையாட்டு மைதானங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மாற்றப்பட உள்ளது. இதற்காக விளையாட்டு மைதானங்களை எஸ்.டி.எ.டி. என்ற மாநில அரசின் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம்.

தற்போது சென்னை மாநகராட்சியில் 863 பூங்காக்கள் இருக்கிறது. மேலும், 250 சிறுவர்கள் விளையாட்டு மைதானங்கள் 238 பல வகையான வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானங்கள் இருக்கிறது. இவற்றில் ஒரு சில மைதானங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளது. அத்தகைய இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்போம்.
மிக்ஜம் புயலுக்கு பிறகு பல்வேறு விளையாட்டு மைதானங்கள், மழைநீர் வடிகால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகள் கொட்டுவதற்கும் மற்றும் மைதானங்களில் உள்ள மரக்கிளைகள் வெட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்தெந்த மைதானங்களில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதோ அவற்றை அகற்றவும், மீண்டும் இந்த செயல்களை செய்யாமல் இருக்கவும் தகுந்த நடவடிக்கையும் இனி எடுக்க உள்ளோம்.
வெள்ளநிவாரண தொகையை பொறுத்தவரை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறையுடன் மாநகராட்சி உறுதுணையாக இருந்துள்ளது.. சென்னை மாநகராட்சி சார்பில் மழை நிவாரண தொகைக்காக விடுபட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துள்ளோம். இந்த பட்டியலை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளது. அரசின் ஒப்புதல் பெற்றபின் விரைவில் விடுபட்ட அனைவருக்கும் நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வெள்ள நிவாரணம் எப்போது?: தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நிலங்களில் வீசிய மிகஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலரனண உதவித் தொகையாக ரூ.6000/ வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படியே வெள்ள நிவாரணம் 6000 ரூபாய் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.
அதேநேரம் மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு/ மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்கள்து வாழ்வாதாரம் பாதிபபு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் தங்கள் பாதிப்புக்குரிய நியாயவிலை கடைகளில் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் அவர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மக்கள் வழங்கினர். சுமார் 5.5லட்சம் பேர் 6000 நிவாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் இதுவரை 6000 நிவாரணம் வங்கி கணக்கிற்கு வரவில்லை..
அண்மையில் மேயர் பிரியா பேட்டி ஒன்றில், "சென்னையில் விடுபட்டவர்களுக்கும் ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளனர்.. பரிசீலனைக்குப் பின் நிவாரணம் குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றார். அதேபோல 5.5 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2.3 லட்சம் விண்ணப்பங்கள் சரிபார்த்து வருவாய் பேரிடர் மேலாண்மைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னதாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications