தமிழ்நாட்டில் கனமழை கொட்டும்.. எந்த 16 மாவட்டங்களில் தெரியுமா.! வானிலை மையம் சொன்ன குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் வெப்பம் மெல்லக் குறைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
கோடைக் காலம் முடிந்துவிட்ட போதிலும், இன்னும் வெப்பம் பல இடங்களில் குறையவில்லை. பொதுவாக ஜூன் மாதம் வெப்பம் படிப்படியாகக் குறையும் என்ற போதிலும், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியே இருக்கிறது.
அதேநேரம் மற்றொருபுறம் மாநிலத்தில் சில இடங்களில் பருவ மழை மெல்ல ஆரம்பித்துள்ளது. இதனிடையே வரும் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.

வானிலை மையம்: நேற்று வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத் தீவிர புயல் பிப்பர்ஜாய், வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று (15.06.2023) இரவு 22:30--23:30 மணி அளவில் மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)-மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையைக் கடந்ததாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அதில், "தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (ஜூன் 16) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (ஜூன் 17) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16 மாவட்டங்கள்: அதேபோல நாளை மறுநாள் ஜூன் 18ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் ஜூன் 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல ஜூன் 20ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: இன்றும் (ஜூன் 16) நாளையும் (ஜூன் 17) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இந்த இரண்டு நாட்கள் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications