வீதிக்கு வந்த திமுக காங்கிரஸ் கூட்டணி உரசல்! மாஜி மத்திய அமைச்சர் விட்ட வார்த்தை!
சென்னை: திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருக்கும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி விட்ட வார்த்தை ஒன்று அண்ணா அறிவாலயத்தை சூடாக்கியுள்ளது.
பாஜக ஆட்சியை மத்தியில் அகற்ற வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணியை கட்டமைத்துள்ளன. இந்தச் சூழலில் இந்தியா கூட்டணியில் திமுக குழப்பம் ஏற்படுத்தக் கூடாது எனப் பேசி கூட்டணியில் குண்டு வீசி அதிர வைத்திருக்கிறார் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.

கூட்டணி தர்மத்தை திமுக தான் மீறுகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்திருப்பது திமுக தலைமையை டென்ஷன் ஆக்கியுள்ளது.நம்ம நாராயணசாமியா இப்படி பேசுவது என்கிற அளவுக்கு திமுக தலைமை ஆச்சரியமும் அடைந்துள்ளது. ஏனெனில் திமுகவோடு எப்போதும் சுமூகமாக செல்ல வேண்டும் என நினைக்கும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களில் நாராயணசாமியும் ஒருவர்.
கருணாநிதி இருந்தவரையும் சரி, அதன் பின்னர் ஸ்டாலினிடமும் சரி இணக்கமான போக்கையே கடைபிடித்து வந்தவர். ஆனால் அப்படிப்பட்ட நபரே இன்று திமுக மீது கடும் குற்றச்சாட்டுகள் வைத்திருக்கிறார் என்றால் அது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் உள்ள நபர்களை திமுகவில் இணைத்துக் கொள்வது எந்த வகையில் நியாயம் என்றும் இது தான் கூட்டணி தர்மத்தை காப்பதா எனவும் நாராயணசாமி ஆவேசமாக வினவியுள்ளார். இது குறித்து தாம் யாரிடமும் முறையிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதால் தான் 3 மாநில தேர்தலில் ஆட்சியை பறிகொடுத்தோம் என காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் நாராயணசாமியின் இந்த கோபமும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இப்பவே இப்படியென்றால் இன்னும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தக் கூடும் என்ற விவகாரத்தில் மேலும் உரசல் அதிகமாகலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications