பப்பாளி -எலுமிச்சை அடங்கிய தோட்டக்கலைச் செடிகள் யாருகெல்லாம் இலவசம்? பட்ஜெட்டில் அறிவித்தது என்ன?
சென்னை: கலைஞர் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு
எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைச் செடிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதலாக தென்னங்கன்றுகளும் இலவசமாக அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆற்றிய பட்ஜெட் உரையின் விவரம் பின்வருமாறு;

சிற்றூர்கள்
தமிழ்நாட்டில் உள்ள சிற்றூர்கள் அனைத்தும் அவற்றின் முழு ஆற்றலுக்கேற்ப வளர்ச்சியடைந்து செழிக்க வேண்டும் என்கின்ற இனிய நோக்கத்தை நிறைவேற்றும் திட்டம் இது. தமிழர்கள் நெஞ்சில் எழுதுகோலால் உழுது நம்பிக்கை நாற்றுகளை நட்டவரின் பெயரால் உள்ள திட்டம். ஒவ்வொரு சிற்றூரும் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் வேளாண்மைக்கு அனுசரணையான திட்டங்களை அரவணைத்து முழு வளர்ச்சியைப் பெற்றால்தான் புன்னகை புரிய மறந்த உழவர் பெருமக்கள் சில்லறைகளைச் சிந்தியது போல் சிரிக்க முடியும்.

ஊரக வளர்ச்சித்துறை
இதனால் ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படும் கிராம ஊராட்சிகள் இத்திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து அவை முதலாம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 1997 கிராமங்களில் இரண்டு திட்டங்களும் இரட்டைப் புரவிகளாக ஓடவிருக்கின்றன.

வேளாண் துறை
வேளாண் துறையின் மூலம் கொடுக்கப்படுகிற மானியங்கள், செயல்படுத்தப்படுகிற திட்டங்கள், அமைக்கப்படுகிற கட்டமைப்புகள், அளிக்கப்படுகிற தொழில்நுட்பம், பகரப்படுகிற பயிற்சி போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து உழவர்களை கைப்பிடித்து முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்கிற இந்த முயற்சியை ஊரக வளர்ச்சித் துறையும், வேளாண் துறையும் இணைந்து மேற்கொள்ளும். எண்ணற்ற உலர்களங்களும், கான்கிரீட் களங்களும், நெல் கிடங்குகளும், பண்ணைக் குட்டைகளும், கசிவுநீர்க் குட்டைகளும், சிறு ஏரிகள் பாசன மேம்பாடும் சேரும்போது ஏற்படும் தாக்கம் மகத்தானதாக இருக்கும், இரு விழிகளும் பார்க்கிறபோது பார்வை தெளிவாவதைப் போல்.
Recommended Video

3204 கிராமப் பஞ்சாயத்துகள்
இத்திட்டத்தின்கீழ் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இலவசமாகத் தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதோடு எலுமிச்சை, பப்பாளி, முருங்கை, கறிவேப்பிலை போன்ற தோட்டக்கலைச் செடிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டு ஊரகப்பகுதிகளில் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. வரும் 2022-23 ஆம் ஆண்டில் இத்திட்டம், 3204 கிராமப் பஞ்சாயத்துகளில் 300 கோடி ரூபாய் மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications