அதிகாலை 4 மணிக்கு கதவை தட்டி.. ஒரே நேரத்தில் ‘சுத்து’ போட்ட என்.ஐ.ஏ.. யார் யார் வீட்டில் NIA சோதனை?
சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வரும் நிலையில், இந்த சோதனையில் தற்போது சிக்கியுள்ளவர்கள் யார் யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் சில நிர்வாகிகள் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை 4 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ சோதனையில் சிக்கியுள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, சென்னை வளசரவாக்கத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஏற்கனவே தங்கி இருந்த ஒரு இடத்திற்குச் சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். தற்போது அவர்கள் மதுரவாயல் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், அங்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
மேலும், சென்னை கொளத்தூர் நேர்மை நகரில் உள்ள பாலாஜி என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடந்து வருகிறது. சென்னையில் தற்போது 2 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.
கோவையில் ஆலந்துறை ஆர்.ஜி.நகர் பகுதியில் உள்ள ரஞ்சித் குமார் என்பவரின் வீட்டில் இன்று அதிகாலை முதல் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றுள்ளது. ரஞ்சித் குமார், நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நிர்வாகியாகச் செயல்பட்டு வந்துள்ளார். இவரது கணினி, மொபைல் ஆகியவற்றை கைப்பற்றி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். முருகனின் செல்போனை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி சண்முகா நகரில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே, நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன் வீட்டிலும் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில், 'தென்னகம்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த விஷ்ணு பிரதாப் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை நடைபெறுகிறது.
மேலும், நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், இன்று காலை என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தான் வெளியூரில் இருப்பதால் 5ஆம் தேதி ஆஜராவதாக இடும்பாவனம் கார்த்திக் பதில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications