வி.ஐ.பி. வேட்பாளர்கள் யார் யார்? சாதிப்பார்களா! சறுக்குவார்களா! மக்கள் அளித்த பரபரப்பு தீர்ப்பு?
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ள சூழலில் வி.ஐ.பி.வேட்பாளர்கள் சாதிப்பார்களா, சறுக்குவார்களா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.
திமுக, அதிமுக,பாஜக, என பல கட்சிகளிலும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு முக்கியப் பிரமுகர்கள் பலர் இந்த தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம்கண்ட வி.ஐ.பி. வேட்பாளர்கள் யார் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

அமைச்சர் மகன்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாகராட்சியில் 4-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் ஆசிம்ராஜா போட்டியிட்டார். இதேபோல் சென்னையில் தென் சென்னை திமுக மாவட்டப் பொறுப்பாளர் சிற்றரசு சென்னை மாநகராட்சியின் 110-வது வார்டில் போட்டியிட்டிருந்தார். இதேபோல் அதிமுக கூட்டணியில் 99-வது வார்டில் சமூக சமத்துவப் படை தலைவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவகாமி போட்டியிட்டிருந்தார். இவரை எதிர்த்து திமுக சார்பில் மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி களம் கண்டார்.

அமைச்சரின் மனைவி
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மனைவி 6-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு களமிறங்கியிருந்தார். அதேபோல் அவரது மகன் மொக்தியார் மஸ்தான் என்பவரும் செஞ்சி 7-வது வார்டில் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தார். கோவையில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா சேனாதிபதி கோவை மாநகராட்சியின் 97-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.

மாவட்டச் செயலாளர்
மேலும், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வி கோவை மாநகராட்சியின் 52-வது வார்டில் களமிறங்கியிருந்தார். இவர் வெற்றிபெறுவதோடு கோவையில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் பட்சத்தில் மேயர் பதவிக்கான வாய்ப்பும் இவருக்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிழலாக வர்ணிக்கப்படக்கூடிய வடவள்ளி சந்திரசேகர் என்பவரின் மனைவி ஷர்மிளா சந்திரசேகர் கோவை மாநகராட்சி 38-வது வார்டில் போட்டியிட்டார். இவர் அதிமுக மேயர் வேட்பாளராக கூறப்படுகிறார். ஈரோட்டில் தமிழ்நாடு கேபிள் டிவி வாரியத் தலைவர் சிவக்குமாரின் தம்பி கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளராக நின்றார்.

முத்துநகர்
இதேபோல் தூத்துக்குடி மாநகராட்சியில் அமைச்சர் கீதாஜீவனின் உடன்பிறந்த சகோதரரான ஜெகன் பெரியசாமி 20-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். இவர் வெற்றி பெறுவதோடு தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக அதிக இடங்களை வெல்லும் பட்சத்தில் முத்துநகரின் மேயராக வரவும் இவருக்கு மிக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனிடையே அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜா, 59-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார். மேலும், எஸ்.பி.சண்முகநாதனின் மகள் பெருங்குள பேரூராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.

நடிகை ஜெயலட்சுமி
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு களமிறங்கியிருந்தார்கள். இதேபோல் பாஜக சார்பில் நடிகை ஜெயலட்சுமி சென்னை மாநகராட்சி 90-வது வார்டில் போட்டியிட்டார். திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அக்கட்சியின் மகளிரணி செயலாளர் பாத்திமா முஸாபர் சென்னை மாநகராட்சி 61-வது வார்டில் ஏனி சின்னத்தில் போட்டியிட்டார். மேற்கண்ட இவர்கள் அனைவருக்கும் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு என்னவென்பது இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications